பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 125 என்னும் பாடல் பகுதி காண்க. வெற்றிலை கணிச்சி போன்ற வடிவு உடையதாதலின் கணிச்சி என்பதை உவமை யாகுபெயராகப் பெற்றுள்ளது. கணிச்சியிலை என்பது, கணிச்சி போன்ற வடிவுடைய இலை எனப் பொருள்படும். வடிவழகி முதல் கணிச்சி வரையுள்ள ஏழுபெயர்களும் வடிவத்தால் பெறப்பட்டவை. 5. நிறத்தால் பெற்ற பெயர்கள் 5.1 வெள்ளிலை வெள்ளிலை (சி.வை.அ) என்னும் பெயர் நிறத்தால் ஏற்பட்டதாகும். வெற்றிலையைக் குறிக்கும் இப்பெயர் இலக்கிய ஆட்சியும் பெற்றுள்ளது. கம்பராமாயணம் - பால காண்டம் வரைக் காட்சிப் படலத்தில் உள்ள 'பூவணை பலவுங் கண்டார்; பொன்னரி மாலை கண்டார்; மேவருங் கோபம் அன்ன வெள்ளிலைத் தம்பல் கண்டார்' (49) என்னும் பாடல் பகுதி காண்க. கருத்து: மலைக் காட்சி காண்பவர் பூ அணையும் பொன்னரி மாலையுங் கண்டனர்; மற்றும், சிவந்த இந்திர கோபப் பூச்சி போன்ற - மென்று உமிழ்ந்த வெற்றிலைக் கொத்தைகளையும் கண்டனர். இங்கே, தம்பல் என்பது, மென்று உமிழ்ந்த சிவப்பான வெற்றிலைச் சக்கையைக் (கொத்தையைக்) குறிக்கிறது. தம்பல் என்பதற்கு முன்னால் உள்ள வெள்ளிலை என்பது வெள்ளை வெற்றிலையைக் குறிக்கிறது. 5.2 வெள் வெற்றிலை இப்பெயர் சி.வை. அகராதியில் உள்ளது. இதற்குக் கற்பூர வெற்றிலை என்னும் பொருள் தரப்பட்டுள்ளது.