பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


வேறோர் உறுப்பைப் போட்டு இயந்திரத்தை இயங்கச் செய்கிறோம்; அதே போல, மனித உறுப்புகளுள் ஒன்று பழுதுபடின், அதற்குப் பதிலாக, வேறு மனித உறுப்பு ஒன்றையோ-அல்லது விலங்கு உறுப்பு ஒன்றையோஅல்லது பிளாஸ்டிக்கால் (Plastic) செய்த உறுப்பு ஒன்றையோ-இன்னும் இரப்பர் போன்றவற்றால் செய்த உறுப்பு ஒன்றையோ இணைத்து உடலை இயங்கச் செய்வது இன்றைய அறிவியல். மக்கள் உடலில் கெட்டுப் போனவற்றிற்கு மாற்றாக, கண், இதயம், குண்டிக்காய் (Kidney) முதலியன பொருத்தப்படுகின்றன. செயற்கைக் கை கால்களும் வேறு செயற்கை உறுப்புகளும் பொருத்தப்படுகின்றன. குருதியே (இரத்தமே) புதிதாகச் செலுத்தப்படுகிறது.


ஊனுக்கு ஊன்

உறுப்பு மாற்று மருத்துவம் (Transplantation) இக்காலத்தில் மிகுதியாக நடைபெறுகிறது. ஆயினும், பழங்காலத்திலேயே இது பற்றிய அறிமுகம் இருந்ததாகவும்-இம்மருத்துவமுறை கையாளப் பட்டதாகவும் தெரிகிறது. கண்ணப்பர் என்னும் சிவனடியாரின் வரலாற்றில் இது பற்றிய குறிப்பு கிடைக்கிறது. இற்றைக்கு (1988) ஆயிரத்திருநூறு ஆண்டுகட்குமுன், தென்னிந்தியாவில்-தமிழ்நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் கண்ணப்பர் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே திருக்காளத்தி மலையில் உள்ள (கடவுள்) சிவனது திருமேனியை வழிபட்டார். கடவுள் சிலையின் கண்ணில் ஒரு நாள் குருதி வழிந்தது. அதைக் குணப்படுத்தக் கண்ணப்பர் பச்சிலை மருந்தைக் கொண்டு முயன்றார்; முடியவில்லை. ஊனுக்கு ஊன் தரின் குணமாகும் என அவர் முன்பே அறிந்திருந்த மருத்துவமுறை அப்போது நினைவுக்கு வந்தது. சிறு பிள்ளையாதலின், கடவுளின் கண் கற்சிலையில் உள்ளது என்பதையும் சிந்திக்காமல்,