பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ரோஜா இதழ்கள்

கூரை இடிந்து உச்சிமீது விழுந்து விட்டாற்போன்ற அதிர்ச்சியில் பிதுங்கிய விழிகளுடன் லட்சுமி ஓடிச்சென்று அதைப் பொறுக்கி மண்ணைத் தட்டுகிறாள்.

“சீ, போட்டுடு, விஷம். எலி அஞ்சாறா முகர்ந்து பார்த்தது-”

சாணி வாரிவிட்டு கையைப் பாவாடையில் துடைத்துக் கொள்வதுபோல் ஜிலேபியைத் துடைக்கிறாள்.

“ஐயோ, அது வாணாம் லட்சுமி. விஷமாயிப் போனா.” அவள் கைப்பிடிக்கு எட்டாமல் ஓடிப்போய் அந்த இனிய பண்டத்தை வாயில் வைத்துச் சுவைக்கிறாள்.

“நல்லாயிருக்கு...!” இனிப்பைச் சுவைத்து மகிழ்ந்து தலையாட்டும்போது, ‘இத்தனை அருமையான பொருளை இந்த ஐயமாருங்கெல்லாம் வீசித்தான் எறிவாங்களா?’ என்றும் வியக்கிறாள்.

மைத்ரேயி கண்கொட்டவில்லை. எலி விஷம் லட்சுமியை ஒன்றும் செய்யாதா? ஆனால் அவர்களுடைய குடிசைகள் இந்த மனையைவிட மோசமாக இருக்குமாக இருக்கும். இனிமைகளைச் சுவைக்க ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, ஏமாந்த நினைவுகளெல்லாம் முட்டி மோதிக் கொண்டு வருகின்றன.

“மைத்ரேயி!” என்று அக்கா கொடுக்கும் குரலுக்கே நடுங்கிப் போகப் பழகியிருந்தாள். கரிக் கற்சட்டிகள் தேய்த்து அடுப்பு மெழுகி, சமையலுக்குக் கிணற்றுத் தண்ணீர் இழுத்து அக்காவுக்குப் புடவை பிழிந்து உலர்த்தி, சுமதியோ ரஞ்சிதமோ பிள்ளைப்பேற்றுக்கு வந்தால் முன் குழந்தையை சுமந்து, பழைய சோற்றையே இரண்டு நேரமும் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போனாலும் மைத்திரேயியின் வாழ்வில் வசந்தம் வந்ததும் எத்தனை எத்தனை ஆசைகள் இதயப் பூங்காவில் மலர்ந்தன?

“என்னடி, மூணு வேளையும் பவுடர்? போதும்!“ என்று அக்கா அதட்டினாலும் கண்ணாடியைக் கண்டால் அழகு பார்த்துக் கொள்ளத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/24&oldid=1099690" இலிருந்து மீள்விக்கப்பட்டது