பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

143



முறைகளுக்கும் வளத்துக்கும் தக்கபடி, உணவு நிலைகள் வேறுபடுகின்றன: அல்லது தேவைப்படுகின்றன. அவற்றையும் அறிவு நூல்களில் கண்டு கொள்க.

{{gap}இங்கு நாம் செயலையும், அதன் திறப்பாட்டையும் மட்டுமே எடுத்துப் பேசிக் கொண்டிருப்பதால், அவற்றுக்குப் போதுமான உடல்நலக் கூறுகள் மட்டுமே, சிறிது விரிவாகக் காண்போம்.

10. உடல் மேல் ஆறுவகைக் கவனம்

இதுவரை, ஒவ்வொருவரும் ஏதாவது, ஒரு செயலில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும், அந்தச் செயலைத் திறமையாகச் செய்வதற்கும் உடல் நலம் மிகமிக இன்றியமையாதது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். அந்த உடல் நலத்தைப் பேணுவதும் அதை வளர்த்துக் கொள்வதும் அவ்வளவு கடினமான செயலன்று; ஆனால் கவனமான செயலாகும். அந்தக் கவனம் ஆறு நிலைகளில் எப்பொழுதும் நினைவில் இருந்து கொண்டே இருத்தல் வேண்டும். அவையாவன. (1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல். 2. அளவான ஆனால் தேவையான உணவு கொள்ளுதல். 3. போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுதல், 4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல், 5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல், 6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல்)

இந்த ஆறு கூறுகளைப் பற்றியும் சிறிது விரிவாகத் தெரிந்து கொள்ளுவது மிக மிகத் தேவையானதாகும்.

1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல்

உழைப்பு என்பது செயலை அடிப்படையாகக் கொண்டது. செயல் உடலை அடிப்படையாகக் கொண்டது. எந்தச் செயலுக்குமே உடல்தான் காரணமூலம். எழுதுவது, பேசுவது, இயங்குவது போன்ற புறச்செயல்களுக்கும், எண்ணுவது, பார்ப்பது, கேட்டது.துய்ப்பது போன்ற அகச் செயல்களுக்குமே உடல்தான் அடிப்படைப் பொருள். உடல் நலமிழந்தால், இவை அனைத்துச் செயல்களுமே தம் தம் இயக்கத்தில் குன்றிவிடும். உடல் நலமின்மை முதன் முதலில் புறச் செயல்களைக் குன்ற வைக்கிறது. பிறகு, புறச் செயல்களுக்குக் காரணமான அகச் செயல்கள் குறைவுபடுகின்றன. இறுதியில், எண்ணவும், சிந்திக்கவும் முடியாத அளவுக்கு உடல்நலமின்மை மாந்தனைச் செயலற்றவனாக ஆக்கிவிடுகிறது. எனவே, உடல் நலமே அனைத்துக்கும் இயக்கக் களமாகி விடுகிறது.

உடல் நலமாக இருக்க வேண்டுமெனில், உடல் இயங்க வேண்டும். உடலும் அதன் இயக்கமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பன. உடல்தான்