பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

செயலும் செயல் திறனும்



இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

(628)

6. இடையூறு உறுதிக்கு அடிப்படை

ஒரு செயலைத் தொடங்குகையில், ஒருவன் ஈடுபாட்டை உறுதியுடையதாக ஆக்குவன, அவன் தொடக்கத்தில் பெறும் இடர்ப்பாடுகளே! பின்னர் அந்த உறுதிப்பாட்டையே துணையாகக் கொண்டு, அவன் மேற்கொண்ட வினையில் அல்லது செயலில் மூவுரமாக (மூவுரம் என்பது, உடல், உரம், உள்ள உரம், அறிவு உரம் என்பவற்றை, இவற்றின் உறுதிப்பாட்டைக் குறிக்கும். மூவுரம் என்னும் இச்சொல்லே, வழக்கில் முவ்வுரம் - மும்முரம் என்று திரிந்தது. இந்தச் செயலை அவன் மும்முரமாகச் செய்கிறான் - என்னும் வழக்கை அறிக - ஈடுபடுவானாகில், அடுத்து வரும் துன்பங்கள் அவனை ஒன்றும் செய்து விடுவதில்லை.

7. இடையூறுகளின் வகை

ஒரு செயலுக்கிடையில் வரும் இடர்ப்பாடுகள் பலவகையானவை. முதற்கண் ஒரு செயலுக்கு இடையூறாகவும், இடர்ப்பாடாகவும் அமைவது அவன் உடலே ஆகும். உடல் நலிவடையும் பொழுது உள்ளம் சோர்வடைகின்றது. உள்ளம் சோர்வுற்றால் அறிவு தளர்கிறது. இவை மூன்றும் அவனுக்கு வரும் அகத்தாக்கங்கள்.

இனி, அவனுக்குப் புறந்தாக்கங்களாக வருவன கருவிச் சேதம், துணைத் தொய்வு, எதிர்ச் செயல்கள், பொருள் முடை, காலப் பிறழ்ச்சி, இடம் பொருந்தாமை, ஆட்சி முரண் போன்றவை ஆகும். இவற்றைக் கீழ்வருமாறு ஒரு பட்டியலில் அமைத்துக் கொள்ளலாம்.

இடர்ப்பாடுகள்

1. அகத்தாக்கம்

அ. உடல் நலிவு.
ஆ உள்ளச் சோர்வு
இ. அறிவுத் தளர்ச்சி

2. புறத்தாக்கம்

அ. கருவிச் சேதம்
ஆ துணைத் தொய்வு
இ. எதிர்ச் செயல்கள்
ஈ. பொருள் முடை
உ காலப் பிறழ்ச்சி
ஊ. இடம் பொருந்தாமை
ஏ. ஆட்சி முரண்.