பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

141



8. உடல் நலத்துக்கே உணவு வகை

உடலை நலமாக வைத்திருப்பதற்கு ஓரளவு நல்ல உணவு தேவையே. ஆனால் பலர் உடல் நலத்துக்காகவே உண்ண வேண்டும் என்பது தெரியாமல், பசிக்காகவே உண்ண வேண்டும் என்று நினைக்கின்றனர். மிகப்பலர் ஆசைக்காகவே உண்கின்றனர். எனவே, நல்ல உணவைத் தேர்ந்து தேடி உண்ணாமல், கிடைத்த உணவை உண்ணுகின்றனர். ஆசைக்காக உண்பது தாழ்ந்த நிலை; பசிக்காக உண்டது அதனினும் சிறிது உயர்ந்த நிலை; உடல் நலத்திற்காக உண்பதே மிக உயர்ந்த நிலை; இனி, செயலுக்காக உண்பதும், அறிவுக்காக உண்டதும் மிக மிக உயர்ந்த நிலைகள். அறிவுக்காக உண்பவர்கள் வயிற்றுப் பசிக்காக உண்ணும் நிலையைக் கூடிய மட்டில் தவிர்க்கிறார்கள்; குறைவாக மதிக்கிறார்கள். பசி, உடலுக்கு உணவு தேவை என்று உணர்த்துகிற ஓர் இயற்கை உணர்வே, உண்ணும் நேரத்தை அறிவிக்கின்ற ஓர் எச்சரிக்கை அறிவிப்பே. பசிக்காக உண்ணும் நிலை என்பது தவறு. உண்ணுவதற்காகவே பசிக்கிறது. உண்ண வேண்டும் என்பதால் எதையும் உண்ணவேண்டும் என்பதில்லை. உடலுக்காக உண்ணக் கூடாது. உடல் நலத்துக்காகவே உண்ண வேண்டும். உடல் நலம் என்கிற பொழுது, உடலில் எந்த ஆற்றல் குறைகிறதோ, அந்த ஆற்றலை நிறைவு செய்வதற்காகவே உண்ண வேண்டும். பார்வையைக் கூர்மையாக்கவும், செவியை நன்றாகக் கேட்கச் செய்யவும், பிற உடல் கருவிகளை வலுப்படுத்தவும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கு அடிப்படையான மூளையை நன்றாகச் செயல்படச் செய்யவும் உயிரியக்கத்தைக் காத்துக் கொள்ளவும் பலவாறான உணவுகள் தேவை. ஒரே வகை உணவால், இவை அனைத்தையும் நலமுறச் செய்ய முடியாது.

எலும்பை உறுதியாக வைத்துக் கொள்ள உதவும் உணவு, தசை வளர்ச்சிக்குப் பயன்படுவதில்லை. தசை வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவையான உணவு, நரம்பு மண்டிலங்களை வலுப்படுத்துவதில்லை. இனி, நரம்பு மண்டிலங்களுக்கு ஏற்ற உணவு, மூளை நலத்துக்கு உகந்ததாக இருப்பதில்லை. உடல் வலிவு வேறு; உடல் நலம் வேறு. உடல் வலிவு என்பது தசைகளின் உறுதி, நரம்புகளின் உறுதி, எலும்புகளின் உறுதி ஆகியவற்றைப் பொறுத்தது. உடல் நலம் என்பது, நெஞ்சாங்குலை இயக்கம், கல்லீரல், மண்ணிரல் இயக்கம், கழிவுப் பொருள்களுக்குரிய உள்ளுறுப்புகளின் இயக்கம், அறிவுக் கருவிகளுக்கான இயக்கம், குருதித் தூய்மை முதலியவற்றைப் பொறுத்தது.

9. உடல் வலிவும் உடல் நலமும்

உடல் வலிவாகவும் இருத்தல் வேண்டும்; அதேபொழுது நலமாகவும் இருத்தல் வேண்டும்; உடல் வலிவு மிகுந்தால் நலம் கேடுறலாம்; நலம் மிகுந்தால் வலிவு கெடாது. எனவே உடல் வலிவினும், உடல்நலமே