பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கோடுகளும் கோலங்களும்

குலுங்குகிறாள். சின்னம்மா கண்ணகி போல் தலையை விரித்துக் கொண்டு மண்ணைவாரி வீசிய காட்சி அவளை ஒரு சாணாகக் குறுகச் செய்கிறது.

இந்தப் பெண் என்ன கலகத்துக்கு வழி செய்கிறாள்? புளிய மரத்தில் புளி உலுக்குகிறார்கள் போலும்?

வருடத்துக்குப் புளியம் பழம் இந்தக் குத்தகைக்காரியிடம்தான் அவள் வாங்குவாள். இது தித்திப்பும் புளிப்புமாக மிக ருசியாக இருக்கும்.

“புளியம்பழம் வாங்குறீங்களா? உலுக்குறாங்க..?”

மேலத்தெரு சிங்காரத்தம்மா கேட்கிறாள். இவளுக்கு அது காதிலேயே விழாமல் தேய்ந்து போகிறது. புளியாவது புளி? இங்கே குடி முழுகுவது போலல்லவோ காரியங்கள் நடக்கின்றன. சரோவுக்குச் சைக்கிள் பழக்குவதிலேயே அவளுக்கு உடன்பாடில்லை. ஆனால், எல்லாம் அவள் பார்வைக்கு மீறியதாகவே நிகழ்கின்றன. எட்டு வயசிலேயே குட்டி சைக்கிளை அப்பா கடையில் இருந்து எடுத்து வந்து பழகிவிட்டாள். ஏழாவதிலிருந்து சைகிளில்தான் பள்ளிக்கூடம். இவளுக்கென்று, குறுக்குப் பார் இல்லாத வளைவான கைப்பிடி, சீட்டு எல்லாம் உள்ள சைக்கிள். இப்போது சரவணனும் அதில் போகிறான். அடுத்த வருசம் தனக்குப் புதிய சைக்கிள் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

கீழத் தெருவில், மூக்காயிப்பாட்டி பேத்தி ரஞ்சிதம் எட்டுவரை படித்து நின்றுவிட்டாள். எந்தப் பெண்ணும் சைக்கிளில் போகவில்லை.

வேகு வேகென்று வீட்டுக்கு வருகிறாள்.

சரோதாவணியை எடுத்து மடித்து விட்டு, வெறும் மேல் சட்டையும், பாவாடையுமாக இருக்கிறாள். வெளியில் செல்லும் போது தாவணி அணிய வேண்டும் என்பது பாட்டியின் சட்டம்.

“ஏண்டி? ரோட்டுல அத்தினி வேகமாக சைக்கிள்ள வந்தீங்க... அந்தப் பய்யங்க ஆருடீ?”