104
கோடுகளும் கோலங்களும்
“மிசின்காரர் வூட்ட வேலை இருந்திச்சி. போயிட்டே.”
"ஏம்பா கூடவே ஒழச்சிட்டு நம்மூட்டுக்கு வராம போயிட்ட?”
அவன் கால் பெருவிரல் நிலத்தைச் சீண்டுகிறது.
“நம்மூடு இல்லிங்க. உங்கூடு. நீங்களும் நானும் எப்படீங்க சமமாக முடியும்?”
"இதெல்லாம் என்ன கன்னிப்பா, புதுப் பேச்சு?”
"புதுசு இல்லீங்க. பழசுதா. எனக்குத்தா புத்தி குறைவு. நா ஒங்கள அக்கா அக்கான்னு கூட்டாலும் எனக்கு அக்கா ஆக முடியுமா? நீங்க எசமானி. நா பண்ண பாக்குற கூலிக்கார ஆயி அப்பந் தெரியாத அநாத. ஊருச்சோத்தத் தின்னும் கூலிக்கார ஆயா எப்படிங்க ஒண்ணாக முடியும்?” அவனுடைய நெஞ்சுச் சுமையைப் பிளந்து வரும் குரல்...
அவள் சொல்லொணா வேதனைக்காளாகிறாள்.
"ந்தா.. கன்னிப்பா, நீ இப்படியெல்லாம் பேச எங்க கத்துக்கிட்ட உன்னயாரு என்ன சொன்னாங்க?”
புரியவில்லை.
யார் என்ன சொல்லி இருப்பார்கள்? அவள் புருசனா? இருக்காதே? அண்ணனா? சரோவா? அப்பாவா? இல்லை.. அம்மாவாகத்தான் இருக்கும்.
அவள்தான் விசச்சொல்லை உதிர்ப்பவள். பல்லில் விசம். உடம்பில் விசம்.
“யாருப்பா சொன்னாங்க... ? கன்னிப்பா?” அவன் அருகில் நகர்ந்து அவன் கையைப் பற்றுகிறாள்.
அவனுக்குச் சிறுபிள்ளை போல் அழுகை வந்துவிடுகிறது.
“யாரப்பா உன் மனசு நோகப் பேசியவர்?”
"இல்லீங்க யாரும் இல்ல. நீங்க வீட்டுக்குப் போங்க. நீங்க இந்தக் குட்சப் பக்கம் வந்தது யாரு கண்ணிலும் பட்டாக்கூட