பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

கோடுகளும் கோலங்களும்

புல் அறுத்துக் கொண்டு இவள் நகருவதைக் கன்னியப்பன் பார்க்கிறான்."என்னக்கா, பேசாம போறிங்க?”

தன் விதி வலிமையைக் காட்டும் பெருமையா?

“பேசுவதற்கு என்னப்பா இருக்கு?”

“ஏனில்ல? எப்ப கடல வெட்டப் போறீங்க? வெட்டறதுக்காச்சுக்கா. நா நெறய பேரக்கூட்டிட்டு வந்து ஒரு புடிபுடிக்கணுமில்ல? முதமுதல்ல கடலபோட்டு அமோகமா எடுக்கப் போறீங்க. எனக்கு வேட்டி மட்டும் வாங்கித்தந்தாப் பத்தாது.”

“வேட்டி வாணாம். டெளசர் வாங்கித் தாரே. பூடிசும் போட்டுட்டு தாட்டுப்பூட்டுன்னு நடந்து வா!"

அவள் சிரித்துக்கொண்டே இதைச் சொல்லவில்லை. குத்தல் தொனிக்கிறது. அது அவளே அறியாமல் வரும் குத்தல்..

அவன் சிரிக்கிறான். அப்போது கூடையுடன் லட்சுமி வருகிறாள். முருங்கைக் கீரைக் குழைகள் கூடை நிறைய...

"மிசின் பக்கம் கழிச்சிப் போட்டிருந்தாங்க. ஆட்டுக்கும் குடுக்கலாம்; வூட்டுக்கும் ஆவும். உங்களுக்கு வேணுமாக்கா?”

“வாணாம். இன்னைக்கு எல்லாம் ஆயிடிச்சி.”

“மாமா ஊரிலேந்து வந்திட்டரா?” கன்னியப்பனின் சட்டையும், டிரான்சிஸ்டரும் அவளை அப்படிக் கேட்கும்படித் தூண்டுகின்றன.

“இல்ல. வெயில்தா எரிக்கிதே... ஆனா அறுப்புக்கு மின்ன வந்திடுவாங்க...”

கிராமியமாகப் பச்சை வாயில் சேலையைப் பின் கொசுவம் வைத்து உடுத்தியிருக்கிறாள். ஒரு கையில் கொடியாக இலைகள்... லட்சுமி கறுப்பில்லை. சிவப்போடு