பக்கம்:உத்தரகாண்டம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    305


கீழே, லோலாக்கும் பெரிய மூக்குப் பொட்டுமாக, ஒரு பெண், குண்டானிலிருந்து புளிச்சோறு எடுத்து அட்டைத் தட்டில் வைத்துப் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறாள்.

இவர்கள் எல்லோரும் எங்கோ கல்யாணத்துக்குப் போகிறார்கள். நாலைந்து இளம் பெண்கள், விடலைப் பிள்ளைகள், நடுத்தர வயசு சம்சாரி- இரயில் பயணத்தின் சந்தோசங்களை அநுபவிக்கிறார்கள்.

ஒரு இரண்டுங்கெட்டான் பிள்ளை உட்கார்ந்த படியே மரச்சட்டம் நனைய, சிறுநீர் கழிக்கிறது.

“அய்ய, இன்னாமா, இதுபாரு, அது வெளிக்கிருந்திருக்கு இப்படியே சோறு வைக்கிறீங்க?”

கன்னியம்மா கத்துகிறாள்.

கைகழுவக் கூட நீரில்லை. ஒன்றரை இரண்டு வயசு இருக்கும். மண்டை தெரியும் முடியை வாரி உச்சியில் கட்டி நாடாவும் பூவும் வைத்து அலங்கரித்திருக்கிறாள். கன்னத்தில் நெற்றியில் கரிய பொட்டுகள்.

பெண்... இக்கட்டான நிலைமைகளை அவளே சமாளிக்கிறாள்.

சட்டியையே கழற்றித் துடைத்தாற் போல் சன்னலுக்கு வெளியே வீசுகிறாள். பிறகு பிள்ளையுடன் கழிப்பறைப் பக்கம் போகிறாள். அங்கே தண்ணீர் கொஞ்சம் வந்திருக்க வேண்டும்.

“தண்ணியே கொஞ்சூண்டுதா வந்திச்சி... வூட்டேந்து புறப்பிடறப்ப இருக்காம, இங்க வந்து அம்மாளக் கஷ்டப் படுத்தலாமா?...”

அதற்கு ஒரு முத்தம்.

அந்த ஆண் பெரியவனாகி இவளை வாழவைப்பானா?

கன்னியம்மா எதையோ நினைத்தாற் போல் சிரிக்கிறாள்.

உ.க.-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/307&oldid=1050426" இலிருந்து மீள்விக்கப்பட்டது