60 தமிழ் அங்காடி
என்னும் குறுந்தொகைப் பாடல்களாலும், மணிமேகலையில் உள்ள,
"அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப"
என்னும் பகுதியாலும், மனோன்மணியத்திலுள்ள
"எங்கிருந்தன. இவ் அன்றில் பேய்கள்
நஞ்சோ நாவிடை நெஞ்சம் துளைக்கும்"
என்னும் பகுதியாலும் அறியலாம். இதைத்தான் கம்பர் சுருங்கக் கூறியுள்ளார். அன்றிலின் நா ஒலியால் அரக்கி தன் வலிமை சோர்ந்து நடுங்குகிறாளாம்.
ஆசை மருந்து
அரக்கிக்குக் குளிர்ந்த பொருளெல்லாம் காமத் தியால் சுடு நெருப்பாய்ச் சுட்டெரிக்கின்றனவாம். இக்கொடிய வெப்ப நோயால் இறந்துவிட வேண்டியவள் ஒரு மருந்தால் உயிர் பிழைத்திருக்கிறாள். இராமனை எப்படியும் அடைய முடியும் என்னும் ஆசைதான் அது:
"ஊழி வெங்கனல் உற்றனள் ஒத்தும் அவ்
ஏழை ஆவி இறந்திலள் என்பரால்
ஆழி யானை அடைந்தனள் பின்னையும்
வாழலாம் என்னும் ஆசை மருந்தினே" (85)
ஊழித் தீயை ஒத்து வெப்புற் றிருந்தாளாம். ஆழியான் = இராமன் அடைந்தனள் என்னும் வினைமுற்றுச் சொல்லுக்கு 'அடைந்து' என வினையெச்சப் பொருள் கொள்ளல் வேண்டும். இதனை இலக்கணத்தில் 'முற்றெச்சம்' என்பர். ஆசையால் பல பிணிகள் வருவதுண்டு. ஆனால், இங்கே, உயிர் போக்கக் கூடிய நிலையில் உள்ள காம நோய்க்கு இந்த ஆசை மருந்தாக உள்ளதாம். ‘ஆசை வெட்கம் அறியாது’ என்பது ஒரு பழமொழி, அது எதுவும் செய்யும்.