பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 13 –

வந்த குரிசில் (இருவரையும் முன்பு யானையிடத்திலிருந்து காத்தவன்) ஆற்றோட்டத்தின் கடும் வேகத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது நீரிற் குதித்து, இருவரையும் கொண்டுவந்து கரை சேர்த்தனன். அதுகால் அவன் தலைவியை உளமுருகப் பார்த்து ' நின்னை ஒருபோதும் கைவிடேன்' என்று கூறி, அவளது நெற்றியைத் துடைத்து, பின் நின் அருள் வேண்டும் ' என்று கூறுவான் போலத் தோழியை நோக்கிச் சிரித்தனன். பத்துப் பாட்டில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டில் காணும் இக்காட்சி யினைக் கற்றறிந்தோர் 'களிறு தரு கூட்டம்' எனக் கூறுவர். கனல்மிகு களிற்றினிடமிருந்து மங்கையரிருவரையும் தலைவன் காத்தமையைக் கன்னித் தமிழ் வளர்த்த கபிலர்,

"கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக
இரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச்
சினந்திகழ் கடா அஞ் செருக்கிமரங் கொல்பு
மையல் வேழ மடங்கலி னெதிர்தர
உய்விட மறியே மாகி யொய்யெனத்
திருந்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச்
சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோல்
உடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை
அண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற்
புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப்
புள்ளி வரிநுதல் சிதைய நில்லா
தயர்ந்து புறங் கொடுத்த பின்னர்."

என்று சுவைபடப் பாடியுள்ளார்.

வலிமைமிக்க விலங்கு

புலி வலிமைமிக்க விலங்குகளில் ஒன்றாகும். அது பெரும்பாலும் மலையைச் சார்ந்த இடங்களில்தான் வாழும்