பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

பொறுக்கவில்லை. குழந்தை யில்லாக் குறையைச் சுட்டிக் காட்டி மரகதவல்லியை எப்படியாவது சரிகட்டிக் கொண்டு கலாவைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்று எண்ணினார். இப்போது அவர் முகத்தில் மகிழ்ச்சிக் கோடு படர்ந்தது. கலாவின் ஒடிந்துபோன உள்ளத்திற்கு முட்டுக் கொடுக்க முயன்றார்.

“கலா! உனக்கு நிலையான வாழ்வுதானே வேண்டும்? நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அந்த நிலையான வாழ்வுக்கு வழி செய்கிறேன் என்றார்” சேதுநாதன்.

"உண்மையாகவா! நீங்கள் பொறுப்பேற்று என் நிலையான வாழ்வுக்கு வழிசெய்கிறீர்களா! நான் ஒன்றும் கனவு காணவில்லையே-நனவுதானே இது! அப்படியென்றால் நான் பெரும் பாக்கியசாலி”-என்றாள் கலா. அவள் முகத்தில் நம்பிக்கையின் சாயல் தெரிந்தது.

விட்ட கோட்டையைப் பிடித்து விட்ட வெற்றிக் களிப்பு சேதுநாதனது முகத்தில் தாண்டவமிட்டது. ‘செண்டு' மணம் கமழும் கைக்குட்டையைப் பிரித்தபடி கலாவை நோக்கி. இப்பொழுதிருந்தே உன்னை நான் என் மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்நாள் முழுதும் வைத்துக் காக்கிறேன்” என்று சொன்னார். சொன்ன மாத்திரத்திலேயே கலாவின் முகத்தில் சோகம் முத்திரையிட்டது.

"நீங்கள் என் கணவனாகப் பொறுப்பேற்றுக் கொள்வதை நான் விரும்பவில்லை”.

“பின் என்ன விரும்புகிறாய் என்னிடத்தில்?”

"நீங்கள் எனக்குத் தந்தையாகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்".

"ஏற்றுக் கொண்டு......"