பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

85

“ந்தா, எங்க போற?”

எதிரே சைக்கிள் வருவதும், அவன் இருப்பதும்கூடக் கண்களில் தைக்காமல் அப்படி ஒரு பதட்டம்.

“எதுக்கு இப்படி ஒடுற? வூட்டுக்கு வந்து சேதி சொன்னாங்களா?”

"வயலுக்குப் போயிருந்தேன். பழனியாண்டியும் சின்னசாமியும் பேசிட்டாங்க. கப்புன்னுது. ஒடி வர்றேன். ஏங்க, எதோ வீட்ல ஏறத்தாழப் பேசுறதுதா, அதுக்காக நேத்துக் காலம போனவங்க. நமக்கும் ஒரு பொம்புளபுள்ள இருக்கு. நாளைக்கி அதுக்கும் கலியாணம் காட்சி செய்யணும். ஆனா, ஆம்புள, பொறுப்பில்லாம..” சட்டென்று அவள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.

“ந்தா? என்ன பேசுற நீ.. ? பின்னால் வந்து உக்காரு. வூட்டப்பாக்கப்போகலாம். பெரியம்மா பய்யன் கண்ணன்ல? அவம் பூட்டான். இப்பத்தாசேதி வந்திச்சி. அந்தப் பொண்ணு உசா. சுந்தரிக்குத் தங்கச்சி முறையாகணும். நாம கூடத்தா போகணும்.”

செவந்தி வாயடைத்துப் போகிறாள்.

இருவரும் வீட்டில் வந்து இறங்குகிறார்கள். செய்தி தேன் கூட்டில் தீ வைத்தாற் போல் பரவுகிறது.

“எப்படிச் செத்துப் போனா? கலியாணம் பண்ணி அஞ்சு வருசம் ஆகல. வரவேற்பு குடுத்தானே. நடிகரெல்லாம் வந்தாங்க, கட்சித் தலவரெல்லா வந்தாங்க. அவ்வளவு உசரமும் தாட்டியுமா இருப்பா... சாவுற வயசா?”

“அவ்வளவு ஏத்தமா வாரத உலவம் பொறுக்காத? எவ கொள்ளிக் கண்ணு வச்சாளோ? அந்தப் பொண்ணுக்கு ஒரு நெக்லசு போட்டிருக்கானாம். அதுவே அம்பதாயிரமா, அவெ மட்டும் என்ன, அஞ்சுவெரலும் மோதரம், சங்கிலி, அதுல புலி நகம் வயிரம் பதிச்ச டாலர்...”

அம்சுவின் அத்தை குரலை இறக்கி அடுத்த வரிசையை விரிக்கிறாள்.