பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

செயலும் செயல் திறனும்



அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்

(483)

என்று திருவள்ளுவர் நெப்போலியனின் வீரக்குரலொடும், கிரேக்கப் பேரறிஞன் ஆர்க்கிமிடீசின் அறிவுக் குரலொடும், ஒன்றி முழங்குவார்.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

(489)

என்னும் குறளிலும்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத்து

(490)

என்னும் குறளிலும், வினைக்கு வேண்டிய கால உளவும் கூறுவார். இவ்வாறு அனைத்து அறிஞர்களின் உரையிலும் வினை செய்வதற்குரிய காலம் மிகுந்த இன்றியமையாத ஒன்றாகக் கூறப்பெற்றுள்ளதை நாம் மிக ஆழமாக மனத்தில் ஊன்றிக் கொள்ளுதல் வேண்டும். மற்றும் கழக நூல்களிலும் காலத்தின் முகாமை பலவாறு வருந்தியுரைக்கப் பெற்றிருப்பதைப் பரக்கக் காணலாம். வினைக்குப் பொருந்துவதாகிய காலம் நற்காலம் என்று சான்றோர் பாராட்டியுரைப்பர். எடுத்துக்காட்டாக சிற்சில இடங்களைப் பார்ப்போம்.

தொல்நலம் பெறூஉம் இதுநற்காலம் (அகம்.164)
காலத்தில் தோன்றிய கொண்மூப் போல(கலி. 82-2)
காலனும் காலம் பார்க்கும் (புறம் 41-)
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது(பதிற்.30-14)

எனவே, ஒரு வினை செய்வதற்குரிய காலம் என்று உண்டு என்று தெரிகிறது. பருவத்தே பயிர்செய் காற்றுள்ளபோதே, தூற்றிக் கொள், வெயில் உள்ளபோதே உலர்த்திக் கொள் என்பன போன்ற பழமொழிகளும் அவ்வுண்மையையே உணர்த்துகின்றன.

2. காலம் என்பது என்ன ?

இனி, காலம் என்பது என்ன? நல்ல காலம், கெட்ட காலம் என்று கணியர்கள் குறிப்பிடுகின்ற காலமா? வினை விளை காலம் ஆகலின் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறாரே அந்த ஊழ் என்னும் பொருள் தருகிற காலமா, இல்லை; வேனில், கதிர், முன்பணி, பின்பணி, கார், இளவேனில் என்னும் பருவ காலங்களா? இல்லை; காலை, பகல், மாலை, முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு என்று குறிப்பிடுகின்ற பொழுதுகளா? இல்லை. நமக்கு வந்து வாய்க்கும் குழந்தைமை, இளந்தை, இளமை; வாலை, நடுமை, முன்முதுமை, பின்முதுமை போன்ற வாழ்க்கைக் காலங்களா? அல்லது இவை எல்லாம் பொருந்திய ஒரு சேர்க்கைக் காலமா என்று முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.