பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

செயலும் செயல் திறனும்



இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் (988)

4. தீயவன் பெருமை இகழப் பெறும்

ஒருவன் நல்ல செயலைச் செய்து வறுமைப்படுவது இழிவன்று என்பது போலவே, தீயவற்றைச் செய்து வறுமைப்பட்டுக் கிடப்பது, அவனைப் பெற்ற தாயாலும் வெறுக்கத்தக்கது; அவன் தாயும் அவனை வேறு யார் போலவோ கருதுவாள்; தன் மகனென்று பெருமை பெறக் கருதமாட்டாள் என்றும் திருக்குறள் கூறுகிறது.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் (1047)

5. அறம் என்பது உயர்வான குறிக்கோளே

இனி, இக்காலத்தில் இந்நெறிமுறைகளெல்லாம் பிறழக் காணப்பெறுகின்றன. ஒருவன் எந்தச் செயலைச் செய்தாவது பொருளீட்டலாம் ஈட்டிய பொருளைக் கொண்டு எச்செயலையும் செய்து இன்பம் பெறலாம்; எப்படியும் வாழலாம் என்பது இக்காலத்து மக்களுடைய கடைப்பிடியாக இருக்கிறது. அவ்வாறு இருக்கிறது என்பதால் இக்கொள்கை உயர்ந்ததாகிவிடாது. உலகில் எந்தக் காலத்தும், எந்தவிடத்தும், எந்த மக்களினத்தும் தாழாத கொள்கைகளையே அறம் என்று தமிழ்நெறி நூல்கள் சாற்றுகின்றன.

6. அறம் என்றும் அழிவதில்லை

அவ்வறவுணர்வு என்றுமே அழிவதில்லை. ஒருகால் ஒரு தலைமுறை மக்கள் கூட்டத்து அஃது அழிவது போல் தோன்றினும், அஃது அடுத்த தலைமுறையினரிடம் தழைத்துச் செழித்தோங்கியே நிலைபெறுகிறது. இஃது அறவியல் வரலாறு. எனவே தீச்செயல்கள் என்றும் தீச்செயல்களே, நற்செயல்கள் என்றும் நற்செயல்களே! அவற்றுக்குள்ள பெருமை சிறுமைகளும் என்றும் மடிவதில்லை. இது நிற்க.

7. செயலில் ஈடுபடாமல் வாழக்கூடாது

நாம் இவ்வுலகத்துள்ளவரை ஏதேனும் நமக்குப் பொருந்திய தகுதியான, நம் அறிவுணர்வுக்கும் மனவுணர்வுக்கும் ஏற்ற, நல்ல் ஒரு செயலை, ஒரு நல்வினையை தாம் மேற்கொண்டுதான் வாழவேண்டும் செயல் இல்லாழல் வாழ முடியலாம்; ஆனால் வாழக்கூடாது. சிலர்க்கு முன்னோர் திரட்டிய செல்வம் அள்ள அள்ளக் குறையாதபடி கொண்டிருக்கலாம். ஆனால் அப்பொழுது கூட அவர்கள் ஏதாவது வினையில், செயலில் ஈடுபடாமல் வாழக் கூடாது. அவ்வாறு வாழ்வு தை வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இதனை இன்னும் சற்று விளக்கமாகக் கூறுவோம்.