பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

செயலும் செயல் திறனும்



3. தெரிந்து செய்தல்

திருக்குறளில், செயல் நிலைகளை முறைப்படுத்தும் அதிகார வரிசை சிறிது உற்று நோக்குவதற்குரியது.

எந்தச் செயலைச் செய்யப் போகின்றோம் என்பதைத் தேர்ந்து கொள்வதைத் தெரிந்து செயல்வகை என்னும் அதிகாரத்தால் கூறுவர் குறளாசான்.

அதன்பின், ஒன்று, அச்செயலின் வலிமை, இரண்டு அதைச் செய்வதற்கு முனைந்த நம்முடைய வலிமை, மூன்று அச்செயலைச் செய்ய முற்படுங்கால், இயல்பாகவே அதற்கு வந்து வாய்க்கின்ற பகைவர்களின் அல்லது எதிர்ப்பாளர்களின் வலிமை, நான்கு, அச்செயலுக்கு என நமக்குத் துணை வருவோரின் வலிமை ஆகிய நான்கு கூறுகளையும் உள்ளடக்கி நிற்கும் கருத்துகளையெல்லாம் வலியறிதல் என்னும் அதிகாரத்துள் விரித்துரைப்பார் திருவள்ளுவர் பெருமான்.

அதையடுத்து அவர் கூறுவது காலம் அறிதல் அதிகாரம் அதன்பின் இடன் அறிதல், இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து அறிந்தபின், அவ்வினைக்குரிய துணைவர்களைத் தேர்தலாகிய தெரிந்து தெளிதல், அவ்வினை நிலை நுட்பங்களையும், கொண்டு செய்விப்பார்களையும் செய்முறைகளையும் கூறும் தெரிந்து வினையாடல் ஆகிய அதிகாரங்கள் ஒன்றன்பின் ஒன்று முறையே சொல்லப்பெறுகின்றன.

எனவே காலம் அறிதல், இடனறிதல் ஆகிய இரண்டு அறிவுத் தேர்வு நிலைகளும், வினைக்கு நடுவாக அறிய வேண்டிய நுட்பங்கள் ஆகும் என்று கண்டு கொள்ளுதல் வேண்டும். காலத்தை உணர்ந்த பின் காலத்தாழ்ச்சி கூடாது.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது

- (671)

என்பதை என்றுமே மறத்தல் கூடாது.

4. அனைத்து நலன்களும் பொருத்துதல்

வினைக்குரிய சூழல் அமைவது கடினம். மிகவும் கடினம். அது வாய்ந்தபின் உடனே அது செய்யப்பெறுதல் வேண்டும். வாழ்க்கை நிலையாமை உடையது. எனவே அடுத்து வரும் காலத்துள், நமக்கு இன்றிருக்கும் ஊக்கம் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. இன்று நமக்குள்ள உடல் நலம், மனநலம், அறிவுநலம், கருவிநலம், செல்வநலம்,துணைநலம், காலப்பொருத்தம், இடப்பொருத்தம் முதலியன இனிவரும் காலத்தின் மாறுபடலாம். எப்பொழுதும், ஒவ்வொரு