பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

செயலும் செயல் திறனும்



கணக்கிட்டு, நேர்மையல்லாத பழி தருகின்ற செயல்களைச் செய்பவர்கள் இழிவுகளுக்காக வெட்கப்படாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்னும் பேராசைகொண்ட தந்நலம் உடையவர்கள் என்பார் பேராசிரியர்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)

மேன்மேலும் பழிகளும் குற்றங்களும் வந்து கொண்டே இருக்குமாறு இழிவான அல்லது தவறான செயல்களைச் செய்வதால் வருகின்ற நலன்களை, ஊதியங்களைக் காட்டிலும், அவ்வாறு செய்ய முற்படுவதற்குக் காரணமாக இருந்த, மிகுந்த வறுமைத் துன்பமே இல்லாமையே சிறந்தது.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (657)

நடுநிலை தவறி, நல்ல ஊதியம் அல்லது ஆக்கத்தை மிக விரும்பிப் பேராசைப்பட்டுத் தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதால் வரும் பின் விளைவுகள், அப்படிச் செய்பவர்க்குத் தண்டனையைத் தருவதோடு மட்டும் நில்லாமல், அவரையும் அவரைச் சார்ந்த குடும்பத்தையும், மற்றும் உறவினர்களையும், அவர்கள் அனைவரும் சேர்ந்த குடியையும் கூடத் தாழ்த்தி அழித்துவிடும் என்று கடுமையாக எச்சரிப்பார் அறவியல் பேராசிரியர்.

நடுவின்றி, நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். (171)

எனவே, நாம் செய்ய எடுத்துக்கொள்ளும் செயல் அல்லது வினை சரியானது, நல்லது, சிறந்தது, நமக்கும் பிறர்க்கும் இன்பம் தருவது என்று தெளிந்து, தெரிந்து, தொடங்கிவிட்டால், பின்னர் அதைச் செய்கின்றபொழுது துன்பங்கள் அடுக்கடுக்காக, வகை வகையாக, வந்தாலும், மனம் தளர்ச்சியில்லாமல், தாழ்ந்துவிடாமல், திசை திரும்பாமல், நல்லது அல்லாத வழிகளில் போகாமல், தொடர்ந்து, துணிவோடு செய்தல் வேண்டும் என்பார் அறிவாசான்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (660)

9. இல்லையே என்றும் தீமையைக் கடைப்பிடியாதே

இந்த வகையில் திருவள்ளுவப் பேராசான் இன்னும் இரண்டு கருத்துகளை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துக் கூறுகிறார். அவை இரண்டையும் நாம் எப்பொழுதும் மனத்தில் இறுத்திக் கொண்டு, நம்