பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதுவே உலகம்!...

சீதா-ராகவன்; சூர்யா-தாரிணி என்கிற நாற் கோட்டுருவத்தைச் சுற்றிவளைத்துச் செல்கிறது ‘அலை ஓசை’.

சீதாவின் தாய் ஒரு சமயம் கனவுகண்டாள். மகள் கடலில் அகப்படுவதுபோல. அதன் விளைவாக அலை ஓசை அவளை அடிக்கடி அச்சுறுத்துகிறது. இதுவே மரணபயமாகவும் அமைகிறது. இந்தத் தாய்வழிப்பயம் மகளுக்கும் ஒட்டுகிறது. சீதாவும் அலை ஓசை காரணமாக மருள்கிறாள்; மயங்குகிறாள்; துயருறுகிறாள். இந்த அலை ஓசை இருக்கிறதே இது, கதைக்கு ‘சஸ்பென்ஸ்’ ஆக இயங்காமற்போனாலும், அவளது உயிருக்கும் ஆத்மாவுக்கும் ‘சஸ்பென்ஸ்’ ஆகிறது! உடல், ஆத்மா ஆகிய இரண்டின் கட்டுப்பாடற்ற வினோதக் கலப்புத்தானே இந்த மானுடப்பிறவி?...

ஒரு கட்டம்:

ரஜினிபூர் ஏரி.

சீதா, ராகவன், தாரிணி மூவரும் வருகிறார்கள். குந்துகிறார்கள்.

சீதாவுக்கு தாரிணி என்றால்தான் எரிச்சல் ஆயிற்றே? தலைவலி என்று ஒதுங்குகிறாள்.

சீதாவின் உள்ளத்துக் கோளாறு தாரிணிக்குப் புரிகிறது. “பெண்களின் மனத்தை அறியும் சக்தி உங்களுக்கு இல்லவே இல்லையென்று தெரிகிறது. உங்கள் மனைவிக்கு உங்களுடன் தனியாகவந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போகவேண்டுமென்று எண்ணம்!” என்கிறாள்.

30