பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

123



எனவே, ஒரு செயலை மேற்கொள்ள விரும்புபவன், அச்செயலைச் செய்ய விரும்புவது உள்ளத்தின் உணர்வாகவே தோன்றும். அக்கால் அது முன்னுணர்வு என்று பெயர்பெறும். அதன் பின் அந்தச் செயலுக்கும் தனக்கும் உள்ள பொருத்தத்தைப் படிப்படியாக ஆய்ந்து பார்க்க முற்படும் பொழுது, அது முன்னெச்சரிக்கை என்று பொருள்படும். முன்னது வாழ்க்கை அறிவு. பின்னது அறிவியல் அறிவு.

இவ்வாறு ஒருவன் தனக்கு இயலுகின்ற செயலையும் அதன் பொருட்டுத் தேவையான பிறவற்றையும் அறிந்து எப்பொழுதும் விழிப்புணர்வுடனேயே இயங்குதல் வேண்டும் அவ்வாறு இயங்குவார்க்கு இவ்வுலகில் இயலாத செயல் ஒன்றுமே இல்லை என்பார் திருவள்ளுவர்.

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

(472)

என்பது அவர் வாய்மையுரை. 'எண்ணித் துணிக கருமம்' (467) என்பதும் இதுவே.

6. எச்சரிக்கை உணர்வு

இனி, செயலுக்கு முன்னர் தொடக்கத்தில் உள்ள இவ்வுணர்வே, செயல் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதில் எச்சரிர்கை உணர்வாகச் செயல்படுகிறது. இது செயல்படும் வகையை இன்னோர் எடுத்துக்காட்டால் விளக்குவோம்.

ஓர் உழவர் ஒரு நிலத்தில் வேளாண்மை செய்யப் புகுவதாக வைத்துக் கொள்வோம். அவ்வேளாண்மைக் குரியதாக உள்ள நிலம் எத்தகைய விளைச்சலுக்கு ஏற்றது என்றோ, அல்லது தாம் விளைவிக்கும் பயிருக்கு அந்நிலம் தகுதியுடையதாக இருக்குமா என்றோ எண்ணிப் பார்ப்பது தொடங்கி, அதன்பின் படிப்படியாக விதை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். எவ்வளவு விதை வேண்டும். எப்பொழுது விதைக்க வேண்டும். அதற்கு என்னென்ன எருவிட வேண்டும். எவ்வெக் காலத்து நீர் பாய்ச்சுதல் வேண்டும். எக்காலத்தில் மறு உழவு செய்தல் வேண்டும், களையெடுத்தல் வேண்டும். எவ்வாறு காப்புச் செய்தல் வேண்டும் என்பன பற்றியெல்லாம் எண்ணி முன்னுணர்ந்து செய்யப் புகுவதெல்லாம் எச்சரிக்கை என்னும் உணர்வுக்குள் அடங்குவனவே ஆகும். இவ்வாறு ஒன்று, ஒன்றுக்குமேல் இரண்டு, இரண்டுக்குமேல் மூன்று என்றவாறு, ஒன்றை ஒன்று அடுத்தடுத்து எண்ணுவதும் செய்வதுமாக இருப்பது எச்சரிக்கையாகும். இவ்வாறு எச்சரிக்கையாக இருப்பவர்களுக்குப் பதினாறு போனால் பதினேழு வரும் என்று தெரியுமன்றோ?