பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

புகழேந்தி நளன் கதை



வளர்ப்பு மகளாகவும் வளர்ந்து வரவில்லை. தன் மனைவியைக் கேட்டு விசாரிக்க முடிவு செய்தான்.

என்றாலும் வந்தவரை வரவேற்று முகமன் கூறும் கடப்பாடு இருந்தது. சிரித்தனர்; அதற்காகவே அவர்கள் பழகி வைத்திருந்தார்கள்.

“தங்கள் வரவு நல்வரவு ஆகுக. சொல்லி இருந்தால் ஊர் எல்லைக்கே ஆள் அனுப்பி இருப்பேன்; மன்னிக்கவும்” என்று கூறினான்.

‘சுயம்வரம்’ என்பது யாரோ கட்டி அனுப்பிய கட்டுச் சோறு என்று அறிந்தான். இந்த மாதிரி ‘புரளி’ ஏன் எழுந்தது? அந்த நாட்டில் பத்திரிகைகளும் எதுவும் இல்லை புரளியை மையமாக வைத்துப் பிழைப்பு நடத்த.

இதில் ஏதோ மர்ம தேசக் கதை உள்ளது என்று யூகித்தான். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சூழ்நிலை அறிந்து செயல்பட்டான்.

“ஒன்றும் இல்லை; தங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்று கூறினான்.

அரசியல் தலைவர்கள் சந்திப்பது மரியாதை நிமித்தமாக நடப்பது என்பது அன்றும் இருந்தது. வெளியில் வாய்விட்டுக் கூற முடியாத நிலையில் மரியாதை நிமித்தம் உதவுகிறது. அவனுக்கு அது தான் கை கொடுத்தது.

“மிக்க நன்றி! விருந்து உண்டு போகலாம்” என்று இனிது கூறி வீமன் விடைபெற்றான்.

வந்த களைப்பு; தேரில் வந்த அலுப்பு; ஏமாற்றம்; குழப்பம்; ஒதுங்கி இருக்க விரும்பினான். சோறு வடிக்க வேறு ஒரு ஆள் தன்னுடன் வந்திருப்பதால் அவனை அனுப்பிவிட்டுக் காற்று வாங்கத் தன் அறைக்குச் சென்றான். சாளரங்கள் திறந்தான்; காற்று அவனைத் தேடி வந்து