பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

செயலும் செயல் திறனும்



4. அவரவர்க்கு ஏற்ற செயல்

எனவே, செயல் அருமைப்பாடுடையது என்று கருதி, எவரும் செயல்களைச் செய்யாமல் இருந்து விடுதல் கூடாது இன்னுஞ் சொல்வதானால், செயல்களிலும் செய்வதற்கு எளிமையுடைய செயல்களையே செய்ய முனைதல் கூடாது. அவரவர் அறிவுக்கும் திறனுக்கும், இயல்கின்ற தன்மைக்கும், தம்மிடமுள்ள பொருள் வலிவுக்கும், அதால் கிடைக்கும் கருவி வலிவுக்கும் தக்கபடி, பிறர் செய்வதற்கு அரியவான செயல்களையே செய்தல் வேண்டும்.(26) ஒருவன் ஒரு மூட்டையைத் தூக்கும் வலிவுடையவனாக இருப்பின், அவன் ஒரு பையை மட்டும் தூக்கிக் கொள்ள விரும்புவது பெருமையாகாது. இழுக்காகும். ஒரு யானை செய்யும் வேலையைச் செய்ய முடிந்தவன். ஒரு மாடு செய்யும் வேலையைச் செய்வது எளிதுதான். ஆனால் இஃது இகழ்ச்சியானது. அவரவரின் தகுதிக்கேற்ற, வலிவிற்கேற்ற பெருமைக்குரிய செயல்களையே எவரும் செய்ய விரும்புதல் வேண்டும். எனவேதான் பெருமையை விரும்புகிறவர்கள் அல்லது பெருமைக்குரியவர்கள் எப்பொழுதும் பிறர் செய்வதற்கு அருமையுடைய செயல்களை, அவர்கள் செய்யத் தயங்குகின்ற செயல்களை, எல்லாரும் செய்வதற்கு அஞ்சி ஒதுங்குகின்ற செயல்களை, தங்கள் நிலைக்கு ஏற்பதான செயல்களையே தேடிச் செய்வர். அவை செய்வதற்கு அருமையாக இருந்தாலும், அவ்வினை செய்வதற்குப் போதிய வழி வகைகள் தமக்குக் கிடைக்காமல் இருப்பினும், அவற்றையே தேடி அமைத்துக் கொண்டு, அவ்வருமையான செயல்களையே செய்வர். அப்படிப்பட்டவர்கள்தாம் பெருமையைப் பெற முடியும். அவர்களே பெரியவர்கள். இக்கருத்தையே "பெருமையுடைய ஆற்றுவர்" (975) என்றும் திருக்குறள் நமக்கு உணர்த்துகின்றது.

5. கருமமே கட்டளைக் கல்

இனி, இதே பொருளுடைய இன்னொரு திருக்குறளும் உண்டு. ஒருவன் பெருமையை நாம் எப்படி உணர்வது? அதற்கு என்ன அளவு கோல்? அவன் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு அவனை மதிப்பிடுவதா அல்லது அவன் கற்ற கல்வியைக் கொண்டு அவனைத் தக்கவன் என்று கருதுவதா? அல்லது அவனைச் சேர்ந்த ஆட்களின் எண்ணிக்கையைப் பார்த்து, இவன் மிகப் பெரியவன் என்று கூறுவதா? அல்லது அவன் உடல் அழகை, உயரத்தை, வாழ்க்கை நலன்களைக் கண்டு, இவன் சிறந்தவன் என்று சொல்வதா? எதைக் கொண்டு சொல்வது? என்ன அடையாளம்? என்று திருவள்ளுவப் பேராசானைக் கேட்கும் பொழுது, அவர் சொல்வார், அவன் செய்கின்ற செயலை வைத்து அவனை மதிப்பிடு என்று. அவன் பெரிய செல்வனாக இருப்பான். ஆனால் கள்ளக் கடத்தல் தொழிலையோ, கள்ள நாணயம் அடிப்பதையோ