பாவலரேறு பெருஞ்சித்திரனார்
249
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (661)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (462)
என்பன போன்ற திருவள்ளுவப் பெருமானின் வாய்மொழிகள் மெய்ப்பிக்கின்றன. இனி,
4. செயல்களைச் செய்வதில் திறமை மட்டுமில்லை; ஆனால், விருப்பம், பொறுமை, பெருமை, நல்லுணர்வு, உயர்நோக்கம் ஆகியனவும் ஒருவர்க்கு உள்ளத்தின் அளவாக அமைந்திருத்தல் வேண்டும்.
5. ஒருவர் செய்யும் செயலை இன்னொருவர் அதே போலவே செய்வார் என்று எதிர்பார்க்கக் கூடாது. மற்றவர் முன்னவரினும் மேலாகவும் செய்யலாம்; கீழாகவும் செய்யலாம்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் (514)
என்னும் திருக்குறளை ஒர்க. இறுதியான செயல் முடிவு அவரவர் திறப்பாட்டையே பொறுத்தது. ஒவ்வொருவரும் ஒரு செயலை ஒவ்வொரு வகையாகவே செய்வர்.
6. இனி, ஒவ்வொரு செயலும் ஒவ்வொரிடத்தும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு வகையாகவே அமையும், மக்கள் முகங்கள், தோற்றங்கள், குணநலன்கள் வேறுபடுவன போல் செயல்களும் வேறுபடுகின்றன; திறன்களும் வேறுபடுகின்றன.
7. கொடுத்துச் செய்வதினும் எடுத்துச் செய்வதேமேல்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
தெரிந்தான்என் றேவற்பாற் றன்று. (515)
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல். (516)