பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

91



முதலைக்கு வலிவு அது தண்ணிரில் உள்ள பொழுதே, அது நிலத்துக்கு வருமானால் தன் வலிவை இழந்துவிடும். அதுபோல் தன்வலிவு மிகக்கூடிய இடமே வினைக்குரிய இடம் என்று கருதிக் கொள்ளுதல் வேண்டும்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற -

(495)

இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டியது நெடும்புனல் என்பது. அஃதாவது புனல் (தண்ணிர்) என்று மட்டும் குறிக்காமல் நெடும்புனல் என்று குறித்தது. ஆழமான தண்ணீர் எப்பொழுதும் வற்றாமல் இருக்கும் நீர்நிலை, இட அளவாக நீண்டு விரிந்த நீர்ப்பரப்புள்ள இடம் முதலிய அனைத்துப் பொருள்களையும் குறிக்கவே என்க. ஒரு காலத்து நிறைந்திருந்தது. அடுத்த காலத்தில் வற்றிப் போகும் நீர்நிலை முதலை வாழ்வதற்கு ஏற்ற இடமன்று. ஒரு குறுகிய நீர்நிலையாகவும் அஃது இருந்தால் போதாது. அதுபோல் ஆழமற்ற நீர்நிலையும் அதற்கு ஏற்றதன்று. எனவே தான் நெடும்புனல் என்று குறித்தார் பேராசான்.

இவ்வாறு வினை செய்கிறவன், வினை செய்யப் பொருத்தமான இடத்து, அவன் வினைக்குரிய பொருள், கருவி, துணை முதலியவை எப்பொழுதும், எந்த நிலையிலும் தாழ்ச்சியின்றிக் கிடைத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். சான்றாக வட்டிக்கடை வைக்கின்ற ஒருவன், செல்வர்கள் வாழ்கின்ற இடத்தையோ, ஊரையோ அவன் வினைக்கென்று தெரிவு செய்தல் கூடாது. அங்கு வட்டிக்குப் பணம் பெறுவார் எவரும் இரார் இருப்பினும் பேரளவில் இருத்தல் இயலாது. அதேபோல் மிகுந்த ஏழைகள் உள்ள இடமும் ஊரும் அத்தொழிலுக்குரிய இடம் ஆகாது. ஏழைகளுமாக இல்லாமல், பணக்காரர்களுமாகவும் இல்லாமல், நடுத்தர வருமானமுள்ளவர் வாழ்கின்ற இடமாக, ஊராக அல்லது பகுதியாக அஃது இருத்தல் வேண்டும்.

6. தேரும் படகும்

இன்னும் நன்றாக எண்ணிப் பார்ப்போமானால், அவ்வினை நிகழும் இடம், மக்கள் போதிய வருமானம் இல்லாதவர்களாகவும், அதேபொழுது தொழில் ஆர்வம் உள்ளவர்களாகவும் துணிந்து கடன் பெற்று முதலீடு செய்து தொழில் இயற்றும் ஊக்கமுடையவர்களாகவும் நிறைந்திருக்கின்ற இடமாக இருத்தல் வேண்டும். இன்னும் பார்ப்போமானால் அவர்கள் செய்யும் தொழிலுக்குரிய வருமானமும் அங்குக் கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் பணத்தை வட்டிக்கு வாங்கித் தொழில் செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கடனை அடைக்க இயன்றவர்களாய் இருக்க முடியும்.