பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

செயலும் செயல் திறனும்



ஒன்றோ சிலவோ பழுதுபட்டிருக்கலாம். அதனால் அவர் முடங்கிக் கிடக்கத் தேவையில்லை. அப்பொறிகளின்மையையே ஒரு குறையாக, இயற்கைமேல் போடும் பழியாகக் கொண்டிருத்தல் வேண்டுவதில்லை. இதனைப் 'பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து, ஆள்வினையின்மை பழி'(618), என்னும் திருக்குறள் வழி, தனக்கு முதற்கருவியாகிய பொறி - கை, கால், கண், காது முதலிய பொறிகளும், கைக்கருவிகளாகிய வினைத்துணைக் கருவிகளும் இல்லையே என்று, இயற்கையின் மேலோ அன்றிப் பிறர்மேலோ, சூழ்நிலைகளின் மேலோ, ஒருவன் பழி கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தன் அறிவுக் கருவியை மூலக் கருவியாகக் கொண்டு, அதன் வழி தான் ஈடுபட இயலும் வினைக்குரிய ஊக்க உணர்வை ஒருவன் பெறாமல் போவானாயின், அதுதான் அவன் குற்றம்; அவனுக்குரிய பழி - என்று திருவள்ளுவப் பெருமான் காட்டுவார். இக்குறளுள் வரும் பொறி என்னும் சொல்லுக்கு விதி (ஊழ்) என்று பொருள் தருவார் உரையாசிரியர் பரிமேலழகர். அஃது அத்துணை நேரிடையாகப் பொருந்தும் பொருளன்று. அவர் கருத்து, ஒருவனுக்கு ஊழின் வயத்தால்தான் பொறி குறைவு ஏற்படுகிறது என்பது. அப்பொருள் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வியல் பொருளாக இருக்கலாம். அதனை நாம் ஆராய்ந்து கொண்டோ எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டோ இருக்கத் தேவையில்லை. உலகில் வாழ்கின்றவர்க்குச் சொன்ன அறிவுரைகளே திருக்குறளாதலின் உலகியற் பொருளையே நாம் கொள்ளுதல் வேண்டும். முயற்சி திருவினைக்கும் (616), ஊழையும் உப்பக்கம் காண்பர் (620), உள்ளம் (ஊக்கம்) உடைமை உடைமை (592) முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் (619), அருமை உடைத்தென்று அசாவாமை (தளராமை) வேண்டும் (611) அற்றே மென்று அல்லற் படுபவோ (626) உரம் (அறிவு) ஒருவற்கு உள்ள (ஊக்க) வெறுக்கை (மிகுதி) (600), அசைவிலா ஊக்கம் (தளராத முயற்சி) (594) உள்ளத்து (ஊக்கத்தின்) அனையது (அளவினது) உயர்வு (595), சிதைவிடத்து (அழிவு வந்த விடத்து) ஒல்கார் (தளர்ந்து விடமாட்டார்கள்) உரவோர் (அறிவுள்ளவர்கள்) (597), உடையர் எனப்படுவது ஊக்கம் (591), 'வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்டம்' (661), 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப்பெறின்' (666), 'துன்பம் உறவரினும் செய்கதுணைவாற்றி' (669). 'ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை (ஊக்கமிகுதி) (971) கருமம் செய ஒருவன் கைதுவேன், என்னும் பெருமை' (1021) என்றெல்லாம் ஒருவன் எந்நிலையில் பழுதுபட்டிருந்தாலும் குறைவுபட்டிருந்தாலும், தாழ்ந்திருந்தாலும் , போதிய கருவிகள் இல்லாதவனாக இருந்தாலும், அவனுக்கு ஊக்கவுரைகள் கூறி எழுச்சியூட்டுவர் திருவள்ளுவப் பெருந்தகை.