பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

செயலும் செயல் திறனும்



வைத்து இருக்க இயலாமல் அவரை விலக்க நேரிடும். இதுவும் செயலுக்கு வெற்றியைத் தராது போகும்.

5. தேறிய பின் வேறுபடுவார் பலர்

இவ்வாறே பிற உணர்வு நிலைகளில் ஒருவரோடு ஒருவர் பொருத்தமில்லாற் போய்விடின், அவர்களின் வினை இணைவு நீண்ட நாளுக்கு நிலைத்திராமல் போகும். இனி, மேலே கூறப்பெற்ற அத்தனை உணர்வுகளிலும் பொருந்திய உணர்வுள்ளவர்களைக் காண்பது மிக மிக அரிது. இத்தனை நுண்ணுணர்வுகளும் பொருந்தியவர்களே அல்லாமல் பொருந்தாத பலரும் வினைக்கு முயல்வார்கள் என்பது உலகியலாக இருப்பதாலும், அவ்வாறு பொருந்தியவர்கள் இருவர் இணைவது மிகவும் அருமையாக அமைவதாலுமே, வினை வகையால் தொடக்கத்துப் பொருந்தியவர்கள், இடையிலோ இறுதியிலோ வேறுபட்டு விடுவதே நடைமுறை உலகியலாக உள்ளது என்று திருவள்ளுவப் பேராசிரியர் கருதுவர்.

எவைகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

(514)

இக்குறள் மொழிக்குச் சிறப்புப் பொருள் எழுதுகையில், நுண்ணுணர்வு சான்ற பரிமேலழகர், "கட்டியங்காரன் போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லாது, அதனைக் குற்றம் என ஒழிந்து, தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார்; வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம்” என்று விதந்து கூறினார் என்க.

6. அறிந்தும்அமைந்தும் செய்பவரே தேவை

இனி, வினைத்திறம் உடையாரையல்லது, நம்மாட்டு அன்புடையவர், என்பதற்காக உறவினரையோ, அல்லது அறிவுத்திறம் மட்டும் உடையார் என்பதற்காக நண்பரையோ வினையில் ஈடுபடுத்தக் கூடாது என்பது திருவள்ளுவப் பேராசான் கருத்தாகும்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.

(515).

என்பது அவ்வாய்மொழி. இதற்குப் பரிமேலழகர் செய்யும் உபாயங்களை அறிந்து, செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்ய வல்லானையல்லது, வினைதான், இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று என்று பொருளுரையும்