92
விக்கிரம சோழனாட்சியில் இவன் அரசாங்க அலுவல்களிலிருந்து நீங்கி ஓய்வுபெற்ற நிலையிலிருந்திருக்கக்கூடும்.
இவனைப் பற்றிய பிற நூற் பாடல்கள்
கலிங்கத்துப் பரணிப் பிரதிகளிலும் தண்டியலங்கார மேற்கோள்களிலும் கருணாகரனைப் பற்றியும், கலிங்கப் போரைப் பற்றியும் சில பாடல்கள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு :-
“ஒருவர் ஒருவர் மேல் வீழ்ந்து வடநாடர்
அருவர் அருவரென அஞ்சி - வெருவந்து
தீத்தித்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க் கலிங்க மீதெழுந்த போது.”*
இது தண்டியலங்காரத்தில் சொற் பொருட் பின்வரு நிலையணிக்கு மேற்கோள்.
“கரடத்தான் மாரியும் கண்ணால் வெயிலும்
திரைவயிரக் கோட்டான் நிலவும் - சொரியுமால்
நீளார்த் தொடையதுலன் நேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.‘’
இது தண்டி-கருவிக் காரக வேதுவணிக்கு மேற்கோள்.
“கோட்டம் திருப்புருவம் கொள்ளா அவர்செங்கோல்
கோட்டம் புரிந்த கொடைச்சென்னி - நாட்டம்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கம்
சிவந்தன. செந்தித் தெற.‘’
இது தண்டி - குணக்குறை விசேட அணிக்கு மேற்கோள் ; வீர சோழியம் - அலங்காரப் படலத்தில் இதுவே அணிக்கு மேற்கோளாகவும் காட்டப்பட்டுள்ளது.