பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இந்தக் கேடுகளைக் கண்ட ஆயர் மகளிர், “இவை விரைந்து வருவதோர் துன்பத்தை உணர்த்தும் குறிகள் ஆகும். ஆதலின், நமது வழிபாடு கடவுளாகிய கண்ணனைப் பரவுவோம்” என்று துணிந்தனர் ‘துணிந்து, மாயவன் நப்பின்னைப்’ பிராட்டியுடன் ஆடிய கூரவைக் கூத்து ஆடத் தொடங்கினர்.


ஆய்ச்சியர் குரவை

குரவை என்பது எழுவர் அல்லது ஒன்பதின்மர் கைகோத்து ஆடும் கூத்து. ஆயர் மகளிர் அக் கூத்தினை ஆடிக்கொண்டே கண்ணபிரான் வீரச் செயல்களையும் பிற நல்ல இயல்புகளையும் அவன் எடுத்த பிற அவதாரங்களையும் அந்த அவதாரங்களில் அவன் செய்த அரிய செயல்களையும் பாராட்டிப் பாடினர். அப்பாடல்களில் ஒன்றை இங்குக் காண்க:

“பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே!”

ஆயர் முதுமகள்

இங்ஙனம் ஆயர் மகளிர் கண்ணனைத் துதித்து வழிபட்டனர். அப்பொழுது ஆயர் முதுமகள்ஒருத்தி வைகையில் நீராடச் சென்று மீண்டவள் அங்கு வந்தாள். அவள் உள்நகரத்துச் செய்தி ஒன்றைக் கேட்டு அதனைச் சொல்ல விரைந்து வந்தாள். ஆனால் அவள் தான் கேள்வியுற்ற செயதியைக்