பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


ஒன்றைப்பற்றி அவர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் சாப்பிடக்கூட கவனமிருக்காது. இப்படித்தான் ஒருசமயம் எடிசன் இரவு முழுவதும் தனது ஆராய்ச்சி சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். பொழுது விடிந்ததும் அவர் காலை ஆகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆகாரம் வர தாமதமாகி விட்டதால் அவர் அப்படியே சோபா ஒன்றில் சாய்ந்து தூங்கிவிட்டார்.

எடிசனுக்கு காலை ஆகாரம் டீ முதலியவை ஒரு தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் வேலைக்காரன் அவரை ஆகாரம் சாப்பிடுவதற்கு எழுப்பவில்லை. அச்சமயம் அங்கிருந்த அவருடைய உதவியாள் ஒருவன் ஆகாரங்களில் சிலவற்றை முதலில் சாப்பிட்டானாம். பிறகு எடிசனை ஏமாற்ற எண்ணி வந்திருந்த ஆகாரம் அத்தனையையும் சாப்பிட்டு விட்டுத் தட்டை காலியாக அவர்முன் வைத்து விட்டானாம்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு, எடிசன் கண் விழித்து பார்த்தார். எதிரே இருந்த மேஜைமீது ஆகாரத் தட்டு காலியாயிருந்தது. அதை கண்ணுற்ற எடிசன் தாம் ஆகாரங்களை சாப்பிட்டுவிட்டதாகவே எண்ணி விட்டாராம்.

சிறந்த விஞ்ஞானியான எடிசன் இவ்வளவு ஞாபக மறதியாக இருந்தார் என்றால் யாராவது நம்புவார்களா?