பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

இறைவர்க் கொரு பச்சிலை” என்றார் ; இதனை நினைப்பிக்கும் முறையில் 83-ஆம் பாட்டில்,

“புற்றிலை யாபுக லூரிலை யாவெனப் போற்றியின்றே
சற்றிலை யாயினும் தூவுநெஞ் சேபினைச் சாவிலேயே”

என்றார். “படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சும் என் நாவிற் கொண்டேன்” என்ற அப்பர் வாக்கை,

“அடைக்கலம் நானுன் அடித்தா மரையினைக்(கு) ஐந்தெழுத்தாம்
படைக்கலம் நாவிலுண்(டு) அஞ்சேன் எவர்க்கும்...”

என்ற வரிகள் நினைவூட்டும்.

விக்கிரம சோழன் ஆட்சியில்

சிவ பக்திச் செல்வராகவும், பெரும் புலவராகவும், அருங்கொடை வள்ளலாகவும், புலவர்களை ஊக்கிக் காத்தவராகவும் விளங்கிய நெற்குன்றங் கிழார், முதலாம் குலோத்துங்க சோழனுடைய மகனாகிய விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்திலும் திருமந்திர ஓலை நாயகமாக விளங்கினர். இதனை விக்கிரம சோழனது 11-ஆம் ஆட்சியாண்டுக்குரிய தஞ்சை மாவட்டம் ஆலங்குடிச் சாசனத்தினின்று அறியலாம்.

“ ...--- திருவாய் மொழிந்தருளினாரென்று திருமந்திர ஓலை நாயகம் செயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு பெ...நாட்டு நெற்குன்றத்து நெற்குன்றங் கிழான் அரையன் கருவு... ...”

என்பது அச்சானப் பகுதி (195 of 1894 ; S. I. I. Vol. V 458) இதனால் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் நெற்குன்றங்கிழார் சோழ நாட்டில் இருந்தமை தெளிவு.