பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12. கருவி தேடல்

1. இரண்டாவது பொருள் கருவி

எந்தவொரு செயலுக்கும் அதற்குரிய கருவி இன்றியமையாதது. கருவியின்றி எந்தச் செயலும் நிறைவேறாது. கருவி நம் கையாகவும் இருக்கலாம். வேறு பொருளாகவும் இருக்கலாம். ஆனால் கையே ஒரு செயலுக்கு முதல் கருவியாக இருக்கிறது. கை என்னும் சொல்லுக்கே செயல் என்னும் பொருளுண்டு "கைஇ" என்றால் செய்து என்று பொருள். கை செய்தல்' என்றால் வினை செய்தல் என்று பொருள். கையறுதல் என்னும் சொல் செயலறுதல் செயலற்று போதல் என்னும் பொருளைத் தரும். கைதுவல் என்பதற்கு வினையைத் தவிர்த்தல் - செயலை நீக்குதல் என்று பொருளுண்டு இனி, திருக்குறளில் கை என்னும் சொல்லுக்கு ஒழுங்கு (832), கைத்திறன் அல்லது செயல் திறன் (935) என்னும் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது. எனவே, எந்தச் செயலுக்கும் கையே முதல் கருவியாகிறது. கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது. கருவியிருந்தாலும் அதைக் கைக் கொண்டு தான் செயலில் ஈடுபடுத்த முடியும்.

திருக்குறளில் பொருள், கருவி, காலம், வினை, இடனோடு ஐந்தும், இருள் தீர எண்ணிச் செயல் (675) என்னும் குறளில் குறிக்கப்பெறும் கருவி என்னும் சொல் தொழில் கருவியையே குறிக்கும். கருவியும் காலமும் (631) என்னும் குறளிலும் அச்சொல் அதனையே குறிக்கும். எனவே, ஒரு செயலுக்கு முதலாவதாக வேண்டிய பொருள் முதலுக்கு அடுத்தபடி கருவி முதல் மிகவும் தேவையான ஒன்றாகும். கருவியிருந்தால் ஒரு செயலை நாமே செய்யலாம் அல்லது இன்னொருவரைச் செய்விக்கலாம். ஆனால் செயலுக்குக் கருவி மிக மிகத் தேவை.

2. சுவரில் ஆணி அடிப்பது

கருவி செயலுக்கு அடிப்படை என்று தெரிந்தவுடன், அந்தக் கருவியைக் கொண்டு நாம் செய்யவிருக்கும் செயலும் நமக்குத் தெரிந்ததாக இருத்தல் வேண்டும். வெறும் கருவியை வைத்துக் கொண்டால் மட்டும் செயல் நிறைவேறி விடாது. அந்தக் கருவியை நாம் விரும்பும் செயலில் எப்படிப் பயன்படுத்துவது என்றும் தெரிந்திருத்தல் வேண்டும். ஒரு சுத்தியலையும் ஆணியையும் வைத்துக்