பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 21 —

ஏமாற்றமடைந்த கலைமான் காட்டில் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கின்ற தன் துணையை அழைக்கும் காட்சியைக் காணுகின்றோம். களைப்பு மிகுதியாகவே அது மயங்கி விழுந்துவிடுகின்றது; குரலிலோ தெம்பில்லே. எனினும் அது தன் துணையையே நினைந்து மாறி மாறி அழைக்கின்றது. இதனைப் புலவர் பெருமான்,

"வறல் மரத் தன்ன சுவைமருப்பு எழிற்கலை
அறல் அவிர்ந் தன்ன தேர்நசை ஓடிப்
புலம்பு வழிப் பட்ட உலமரல் உள்ளமொடு
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர்குரல்,"

எனப் பாடியுள்ளார்.

ஆமான்

ஆமான் என்ற சொல் காட்டுப் பசுவைக் குறிக்கும். இது அமர்த்த கண்ணையுடையது. கானவரால் விரட்டப்படும் இதனது கன்று அவர்கள் வாழும் ஊரினிடத்தே சென்று அவர்களுடன் பழகி வாழும் இயல்பினது. நற்றிணை என்னும் நூலிலே நம்முடன் ஒன்றி வாழும் விலங்காகிய பசுவைக் குறித்து ஒரு சொல்லோவியம் காணப்பெறுகின்றது.

மாலை நேரம். காலையில் கானகம் சென்று இரை கொண்ட பசுவொன்று வீடு திரும்பியது. ஆனால் அதன் கன்றோ தனது தாயினைக் கண்டுகொள்ளமுடியாது கலங்கி நின்றது. காரணம், தாய்ப் பசு கானகத்தில் மேய்ந்த போது காந்தள் பூவின் மகரந்தப்பொடி அதன் மேனி யெல்லாம் படிந்ததனால் ஏற்பட்ட நிற மாறுபாடே. இதனை ஆசிரியர்,