பக்கம்:நூறாசிரியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

நூறாசிரியம்

கழியின் நுனியிலே பொருத்தியவாறு, அதனை உருட்டிக் கொண்டு கற்றி வந்து விளையாடுகின்றான். அவன் உன் வருத்தத்தைக் கூடப் பொருட்படுத்தினான் இல்லை! அவன்போல் நீயும் மகிழ்ச்சியாக நின் இல்லறப் பணிகளில் ஈடுபடு; கவலையை மறந்திரு. அவன் வருவான்’ என்று தோழி தலைவியைத் தேற்றினாள் என்க.

இனி, தலைவியின் துயரத்தை மாற்றுதற்கு அவன் கணவன் ஒழுகும் பரத்தையொழுக்கத்தின் தன்மையை உள்ளுறையாக வைத்துக் கூறுவாள், அவன் மகன் விளையாடும் பனங்காய் வண்டியையே ஒர் உவமமாகக் கூறினாள் என்க.

"இதோ! பார் நின்மகன் ஒட்டித்திரியும் இப் பனங்காய் வண்டியை! கொழுவிய சுவையையுடைய நுங்கின் வழுக்கையைப் பிறர் உறிஞ்சிவிட்டுத் தெருவில் விட்டெறிந்த இவ்வெற்றுக் கூந்தையை அவன் கழியின் நுனியில் பொருத்திக் கொண்டு, நின் துயரத்தைப் பொருட்படுத்தாது விளையாடுவது போல், கொழுவிய உள்ளீடு நிறைந்த பெண்மையைப் பிறர் முன்னரே உறிஞ்சிவிட்டுப் புறம் வீசிய அப்பரத்தை உடலின் புறத்தோற்றத்தில் மயங்கி, அவன் பிரிவால் நீ வருந்துகின்றதையும் பொருட்படுத்தாது, அவளொடு சிறுபிள்ளை போல் ஆடிக்களிக்கின்றான், நின் கணவன்; அவனுக்கும் அப்பரத்தைக்கும் உள்ள தொடர்பு, இச் சிறுவனுக்கும் அவன் ஒட்டித் திரியும் இவ்வெற்றுப் பனங்காய்க்கும் உள்ள தொடர்பு போன்றது. அவளொடு அவன் கொண்டிருக்கும் ஈடுபாடு, இச் சிறுவன் கையிலுள்ள மூங்கிற் கழியொடு பொருத்தப் பெற்ற அப் பனங்காயின் இணைப்புப் போல்வது. அம் மூங்கிற்கழி முறிந்து போகுங்கால் இச் சிறுவன் அப் பனங்காயை மீண்டுந் தெருவிலேயே விட்டெறிந்து விட்டு நின்பால் வருவது போல், அப் பரத்தையை இணைத்துத் திரிய உதவுவதாகிய நின் கணவனின் கைப்பொருள் முறிவுறுங்கால், அவளை மீண்டும் அங்கே வீசி விட்டு நின்னை நோக்கி வருவது உறுதி. அதுவரை அமைந்திரு “ என்றாள் என்க.

“வெற்றுப் பனங்காய் பொருத்தப் பெற்றிருப்பது மூங்கிற் கழியின் நுனியிற்றானே யன்றிக் கழியின் இடையில் அன்று. நுனியில் பொருத்தப் பெற்ற பனங்காயை விடுவிப்பது அவ்வளவு கடினமன்று. எனவே அவளொடு அவன் கொண்ட தொடர்பும் அவ்வளவு ஆழமானதன்று. ஒரு நுனியின் அளவே' - என்றாள்.

மேலும், கழி முறிவுறுங்கால், பனங்காய் தானே கழன்று கொள்வது போல், நின் கணவரின் கைப்பொருள் முறிவுறுங்கால் பரத்தையும் தானே க்ழன்று கொள்வாள்’ என்று குறிப்பும் காட்டினாள் என்க.

‘பனங்காய் கழலும் பொழுது தானே தூக்கி வீசிவிட்டு நின்னைத் தேடி வரும் நின் இளமகன் போல, பரத்தை இவன் தொடர்பினின்று கைநெகிழ்க்கும் பொழுதில் நின்னைத்தேடி நின் கணவனும் வருதல் உறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/162&oldid=1220853" இலிருந்து மீள்விக்கப்பட்டது