பக்கம்:நூறாசிரியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

நூறாசிரியம்


“நான் நின்னைக் கூடுதற்கு ஏற்றவன்; உயர்ந்த பெருமை கொள்ளும் காதல் நெஞ்சன்: மெய்யான அன்புள்ளவன். மணவாழ்க்கையை அறவாழ்வில் நடத்த விரும்புபவன் வளம் பொருந்திய ஊரினன் ஆகலின் வறுமை போதர வழியில்லை; என்றன் ஊர் கூடல் மாநகர் என்பது அவன் சுற்றிச் சாற்றிய கருத்துகள்.

உறவே கரவில் உளமொழுகியரே - எனக்கென்றும் உறவேதும் இல்லை. கரவில்லாத உளவழி ஒழுகி நிற்பார் எவரும் உறவினரே! நீயும் கரவில்லாத உளங்கொண்டு நிற்கும் அன்பொழுக்கத்தினள். ஆகலின் நீயும் என் உறவுக்குப் பொருந்தியவளே.

ஒத்த அன்பும் ஒழுகலாறும் உடையர் யாவரும் உறவினர்களே என்பதால், நீ இனம், குலம், பிறப்பு முதலிய பொய்ம்மை உறவுகளைப் பார்க்க வேண்டுவதில்லை என்று குறிப்பால் கூறினான் என்க.

மைம்புகை கூர்ங்கண் அளைப்ப கருமையான புகை தன் கூர்மையான கண்களை அளாவுதல் செய்து வருத்த கூர்ங் கண் கூர்மையாக உற்று நோக்குங்கண். முதுமையுற்றார் தம் கண் பார்வையைக் கூரியதாக்கி உற்று நோக்குவர் ஆகலின், தாய் முதுமையுற்றவள் என்பதை உணர்த்தக் கூர்ங் கண் என்றான் என்க.

ஒயாது அட்டு உறை: சமையல் அறையில் ஓயாது உறைகின்ற.

கொம்பறு கொடி - கொம்பிழந்த கொடி தாய் கணவனை யிழந்தவள் என்பதாகக் குறிப்புக் காட்டினான் என்றபடி

தாய் முதியவள்; கணவனை இழந்தவள் சமையல் அறையிலேயே உறைபவள் என்றது, அம் முதிய தாய்க்குத் துணை வேண்டுவதற்காக, தான் விரைந்து இல்லறம் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாமையையும், அவளுக்குத் துணையாகத்தான் தன் மனைவினைகளை மேற் கொள்ளல் வேண்டும் என்பதையும் குறிப்பினால் உணர்த்தினான் என்றபடி

தாய் கணவனையும், தான் தந்தையையும் இழந்தமையால், தன் மணம் பேச வேறு பெரியோர் இலர் என்பதையும், அது பற்றித் தானே மணம் பேசும் தகுதியுடையவன் என்பதையும் குறிப்பால் கூறினான் என்க.

மாலும் என் நெஞ்சு-மயக்குறும் என்நெஞ்சம், அழகாலும், அன்பாலும் மகிழ்தலால் மயக்குற்ற நெஞ்சம்.

நீயே மாலும் என் நெஞ்சுட் புகுந்து மேயுறு நினைவிற்கு ஆய ஒர் உயிர் - மயக்குற்ற என் நெஞ்சினுட் புகுந்து என் நினைவுகள் எல்லாவற்றினும் கலந்து நிற்பதாகிய ஓர் உயிர் நீ.

மேயுறு நினைவு- கலந்து நிற்கும் நினைவு ஆட்கொள்ளப்பட்ட நினைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/46&oldid=1221632" இலிருந்து மீள்விக்கப்பட்டது