பக்கம்:நூறாசிரியம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

306


தம் உயிர் மாய்த்த - தம் உயிரை மாய்த்துக் கொண்ட பொதுநலத் தொண்டில் உள்ளம் ஒன்றி ஈடுபடும் பெருமக்கள் தாம் மேற்கொண்ட வினையிலேயே அழுந்தி பலதலையான இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு, மனக்கவலையிலும் மெய்வருத்தத்திலும் உழன்று, உயிர் வாழ்க்கைக்குக் கட்டயாத் தேவையான ஊண் உறக்கங் கொள்வதிலும் நாட்டமின்றி, வேளை மறுத்து உண்டும், ஏலா உண்டியைத் தவிர்க்காமலும், நோயுற்ற வழி மருத்துவஞ் செய்து கொள்வதிலும் காலங் கடத்தித் தம் வாழ்நாளுக்கு ஊறுநேரத் தாமே வாய்ப்பளித்தலின் தம் உயிர் மாய்த்த என்றார்.

பிறவற்றில் நாட்டமின்றித் தான் மேற்கொண்ட வினையில் முழுமூச்சாய் ஈடுபடுவானைக் குறித்து அவன் அதிலேயே கிடந்து மாய்கிறான் என்னும் உலக வழக்கையும் நோக்குக

இனிக் கொடும் பகைவரை இனங்கண்டு அவரிடத்து விழிப்பாய் இராமையும் தாம் மாய்க்கப்படுதற்கு இடஞ் செய்தலால் அதுவும் கொள்ளப்படும்.

பெரியோர் சிலரே - மேற்கூறியவாறு தம் உயிரையும் பொருட்படுத்தாது பொதுநலத் தொண்டாற்றுவது பெரிதும் அரிய செயலாதலின் அதனைச் செய்வாரைப் பெரியோர் என்றார்.

மேல் பலர் எனப்பட்டோர் எண்ணற்றோர் ஆதலின் ஈண்டுச் சிலர்’ எனப்பட்டோர் மிகச் சிலர் எனக் கொள்க.

யாண்டு அவர் பிறந்தவர்.ஆயினும் - மலை, கடல், யாறு முதலியவற்றான் இயற்கையானும் அரசால் செயற்கையானும் கண்டம், நாடு, பைதிரம் எனப் பாகுபடுத்தப்பட்ட இடப்பகுதிகளுள் எங்கே பிறந்தவர் ஆயினும்,

இனி, மொழியாலும் இனத்தாலும் தொழிலாலும் சமயத்தாலும் பாகுபட்டுக் கிடக்கும் மக்கட் பிரிவுகள் பலவற்றுள் எதன்கட் பிறந்தோராயினும் எனவும் கொள்க!

மாண்தக வையத்து அவர் வாழுநரே - அப்பெருமக்கள் இவ்வையகத்தில் என்றென்றும் சிறப்புற வாழ்பவரேயாவர். அவர் இறந்தும் இறவாதவரே என்றவாறு.

நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

என்னுந் திருக்குறளையும் ஈண்டு நோக்குக !

பெருமக்கள் மேற்கொண்ட அருவினையின் நற்பயன் உலகத்தார்க்குத் தொடர்ந்து கிட்டுதலானும் வாழ்தல், என்பது பிறர்க்குப் பயனுற வாழ்தல் என்பதே சிறப்பாகக் கொள்ளப் படுதலானும் அப்பெரியோர் உடலளவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/332&oldid=1221169" இலிருந்து மீள்விக்கப்பட்டது