பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


நடிகர் மட்டுமன்று எம். ஆர், சாமிநாதன், ஒரு நாடகாசிரி யருமாவார். இவர் எழுதிய ‘ஜம்புலிங்கம்’ என்னும் சீர்திருத்த நாடகத்தை நாங்கள் 1934ஆம் ஆண்டில் நடித்திருக்கிறோம். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கோயமுத்தூரில் ‘அசோகன பிக்சர்ஸ்’ என்னும் படக் கம்பெனி வைத்திருந்தபோது, எம்.ஆர். சாமிநாதன் கதை எழுதும் பொறுப்பிலும் சிறந்த முறையில் பணி புரிந்திருக்கிறார். பழனியாபிள்ளை அவர்கள் ஸ்ரீ மீனலோசனி பால சற்குண நாடக சபா’ என்னும் பெயரால் ஒரு சொந்தக் கம்பெனியை நிறுவி, இலங்கையில் நாடகங்கள் நடத்தி வந்த போது திரு எம். ஆர். சாமிநாதன், திரு டி. எஸ்.துரைராஜ் ஆகிய இருபெரும் நடிகமணிகளும் அக்குழுவின் பிரதம நகைச்சுவை நடிகர்களாக விளங்கி வந்தார்கள். டி. எஸ். துரைராஜ் அவர்கள் தயாரித்த "பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்னும் திரைப் படத்தில் எம். ஆர். சாமிநாதன் ஜட்காவாலா வாக நடித்ததை இரசிகர்கள் இன்னும் மறந்திருக்க முடியாது. இவரைப்பற்றி இன்னும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட நேருமாதலால் இத்தோடு இங்கே நிறுத்திக் கொள்ளுகிறேன்.

சிதம்பரனரைத் தந்த சிற்றூர்

புதியம்புத்தூரில் நாடகங்களுக்கு நல்ல வசூல் ஆயிற்று. ஒரு மாத காலம் நாடகம் நடந்தது. அடுத்த ஊர் முடிமன்; புதியம் புத்துரரிலிருந்து சுமார் ஏழு மைல்கள் இருக்கும். எல்லோரும் மாட்டுவண்டிகளில் முடிமன்னுக்குப் புறப்பட்டோம். வழியில் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரைத் தாண்டிதான் போக வேண்டும். ஒட்டப்பிடாரம் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரைத் தந்த சிற்றுார். அப்போது தாலுகாவின் தலை நகராக இருந்ததால் பெரிய ஊராகத் தோன்றியது. சிறந்த வாணிபத் தலமாகவும் விளங்கியது.

முடிமன் சென்றபிறகு அங்கு நாடகக் கொட்டகை இல்லை யென்பதை அறிந்தோம். பக்கத்தில் போலிநாய்க்கனூர், என்றொரு சிற்றுார். அந்த ஊரில்தான் கொட்டகை இருந்தது. முடி மன்னில் கம்பெனி வீடு; போலிநாய்க்கனூரில் நாடகக் கொட்டகை. இடையேயுள்ள சுமார் ஒரு மைல் தூரத்திற்குச் சரியான பாதை கிடையாது.