பக்கம்:நூறாசிரியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

85


17 திமிர்தல் தவிர்ந்தன


திமிர்தல் தவிர்ந்தன தோழி நிமிர்பின்றி!
துமிந்து மின்னோடி முகிலுங் கருமுற்றி
மழை பொழிந்து மண்பனிப்பத்
தழைபரப்பி உழைவருந்தி
மோத்தை புறங்கவிழக் கடமை மறியீன்று 5
ஊத்தை நாக்கொடு நக்கி உளமூறி
உண்ணிய வம்மினெம் மக்கா ளென்ன
வுட்கிடை யுணர்த்த, உள்ளுவந் தோடி
முன்னிளங் காலுறப் பின்கால் எவ்வி
முட்டச் சுரக்கும் முகிழ்முலைக் கென்றன் 10
கட்டிக் கிடக்கும் கவின்முலை தாழ்ந்தே!


பொழிப்பு:

மதர்ப்பு தவிர்தலாயின தோழி, நிமிர்தலின்றி! துறலைச் செய்து மின்னல் ஓடி, முகில்கள் கரு முதிர்ந்து மழையைப் பொழிவித்து நிலத்தைக் குளிர்விப்ப, தழைகளைப் பரப்பிப் புறத்திருந்து வருத்தமுறும்படி ஆட்டுக்கடா முகந் திருப்பிக் கவிழ்ந்து கொள்ள, பெண் ஆடு குட்டிகளை ஈன்று தந்து, கருவுயிர்ப்பு நீரை நாக் கொண்டு நக்கித் துய்மை செய்து, உளத்தே தாய்மை யுணர்வு ஊறியதாய்"பால் உண்ணுதற்கு வாரீர் எம் மக்காள்!” என்னத் தன் உள்ளக் கிடக்கையை உணர்த்துதல் செய்ய, அக்குட்டிகள் உளமகிழ்ந்து அதனருகில் ஒடி, இளமையான முன்னங் கால்களை நிலத்தே படிதலுற ஊன்றி, பின்கால்களால் எவ்வுதல் செய்து, தம் புனிற்றிளந் தலைகளான் செய்கின்ற, அம் முட்டுதலுக்குச் சுரக்கின்ற அப்பெண் யாட்டின் முகிழ்த்த முலைகளின் தகைமைக்கு வறிதே கச்சையான் கட்டப் பெற்றுக் கிடக்கும் கவின் தோய்ந்த என் முலைகள் தாழ்வுற்றவாக,

விரிப்பு:

இப்பாடல் புறத் துறையைச் சார்ந்தது.

அழகும் இளமையும் வாய்ந்தாள் ஒருத்தி, தாய்மை யெய்தாத தன் உறுப்பு நலன் அழியக் கூறித், தனக்கு வந்து வாயாத பிள்ளைப் பேற்றுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/111&oldid=1181930" இலிருந்து மீள்விக்கப்பட்டது