பக்கம்:நூறாசிரியம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

நூறாசிரியம்


99. உள்ளுயிர் நெகிழ்ச்சி

அறிவெனும் விரிசிற கார்ந்து நினைவெனும்
பொறிவண் டிமிரு முள்ளப் பொய்கையுள்
ஒளிச்சுடர் மன்னிய ஒருதனி மலரின்
மெய்யுணர் வென்னுந் தேறல் மாந்தி
ஐயநின் மயலுறப் பொய்வினை கழன்று 5
நிற்பாடி நிற்கண்டு உள்ளுயிர் நெகிழ்ந்து
சில்நெய் பெய்து துண்டிரி மாண்ட
வல்வளித் துண்விளக்க மாகி
உள்நடுங்கி யொடுங்கும் ஒருவனிங் குண்டே!

பொழிப்பு:

அறிவு எனப்படும் விரிகின்ற சிறகு பொருந்தி, எண்ணம் எனப்படும் புள்ளிகளையுடைய வண்டு முரலுகின்ற உள்ளமாகிய தடாகத்துள், ஒளிக்கதிர்கள் பொருந்திய ஒப்பற்ற பெருமலரின் மெய்யுணர்வு எனப்படும் தேனை ஆரஉண்டு, பெருமானே! நின்பேரின்பத்தில் திளைக்கின்றமையால் பொய்யான வினைகளெல்லாம் நீங்கப்பெற்று நின்னைப் புகழ்ந்துபாடி, நின்னை மனத்தாற் கண்டு உயிரகத்தே நெகிழ்ச்சியுற்றுச் சிறிதே நெய்யூற்றப் பெற்று மெல்லிய திரியிட்டு ஏற்றிக் காற்று வலிது இயங்குமிடத்தே வைக்கப் பெற்றுள்ள விளக்குப் போலாகி உள்ளம் நடுக்கமுற்று அமைந்திருக்கும் ஒருவன் ஈண்டு உளன்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் பற்றியது.

ஐய, அறிவொடு பொருந்திய நினைவினையுடைய உள்ளத்தின்கண் மெய்யுணர்வுற்றமையான் பொய்வினை கழன்று நின்னைப் புகழ்ந்துங் கண்டும் உயிர் நெகிழ்ச்சியுற்று நடுங்கி ஒடுங்குகின்ற ஒருவன் ஈங்கு உளன் என்று இறைவனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

விரிந்த சிறகினையுடைய புள்ளி வண்டு ஒன்று தான் மிழற்றுகின்ற மலர்ப் பொய்கையில் ஒளிவீசித் திகழும் ஒருபெரு மலரின்கண் தேன் உண்டு மயங்கிய காட்சி யொன்றும், சிறிதே நெய்யூற்றி மெல்லிய திரியிடப் பெற்று ஏற்றிப் பெருங்காற்று வீசும் வெளியிடத்தே வைக்கப்பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/436&oldid=1223732" இலிருந்து மீள்விக்கப்பட்டது