பக்கம்:நூறாசிரியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

105


மலருக்கு மணம்போல் மங்கையர்க்குக் காதல் என்றாள் என்க. இது தானறியாது நிகழ்ந்தது பற்றி இயற்கையால் நேர்ந்ததென்றாள்.

மதி மிசை ஒளி போல் - மதி தோன்றுகின்ற பொழுது மழுங்கியிருந்து பின் ஒளி நிறைந்து விளங்குதல் போல், தன்னுளத்தும் முன்பு மழுக்க முற்றிருந்து, தலைவனைக் கண்டவிடத்துக் காதல் என்னும் ஒளி நிறைவுற்ற தென்றாள்.

கதிரவனால் நிலவு ஒளிபெறுதல்போல் தலைவனால் தானும் ஒளிபெற்றதை ஈண்டு விளக்கினாள் என்க.

நலங்கிளர் கள் - உடல் நலத்தைக் கிளர்விக்கும் கள். அளவின் உண்டார்க்குக் கள் உடல் நலத்தைத் தோற்றுவிப்பதுபோல், முறையின் கொள்வார்க்குக் காதல் உடல் நலத்தைக் கொடுக்கும் என்னும் உடலியலை ஒர்க.

இளவெறி நசைபோல் - கள்ளினால் தோற்றுவிக்கப் பெறும் முருகிய வெறிபோலன்றிக் காதலால் மெல்லிய வெறி தோன்றின தென்றாள். நசை யென்றது மேலும் மேலும் கொள்ளுகின்ற விருப்பத்தை அது கள்ளுண்பார் மேன்மேலும் கொள்ளுகின்ற விருப்பத்தைப் போன்றது. இது தலைவனால் எழுப்பப்பெற்ற காதல் என்னும் மெல்லிய வேட்கையை மேலும் மேலும் தான் விரும்பினாள் என்றபடி அவனை மறக்கவியலாத தன் நிலையைக் குறிப்பால் கூறினாள் என்க.

தழவினுள் தெறல்போல் - மூட்டப்பெறும் தீயினுள் வந்து பொருந்தும் சூடு போல், கொளுத்தப் பெற்ற காதலால் தன் உடலுள் ஒருவகைச் சூடு பாய்ச்சப்பெற்ற தென்றாள். அது தலைவனை மீண்டுங் கூடிய விடத்தன்றி அடங்காதென்றும் குறிப்பை யுணர்த்தினாள் என்க.

தனிப்பரிதாம் - தலைவனாலன்றிப் பிறரால் தணிப்பதற்கரியதாம். அவன் பிரிவின்கண் சூடுபோல் பரந்து நின்று, அவன் கூடற்கண் தண்ணெனக் குளிர்கின்ற தன்மை யுடையது காதல் என்னுந் திறமுரைத்தாள் என்க.

விறல் வேட்கை - வெற்றி கொண்ட வேட்கை கன்னியர்க்கு எழும் பிற வேட்கை யெல்லாம் அவற்றிற்குக் கரணியமானவற்றைப் பெற்ற விடத்து அடங்கி நிற்பதும் காதல் மட்டும் அதற்குக் கரணியமான தலைவனைப் பெற்றவிடத்தும் அடங்காமல் மேன்மேலும் மிகுந்து நிற்பதும் உணர்த்தப் பெற்றது. பிற வேட்கையெல்லாம் ஒரோவொருகால் தோல்வியுறுவதும், காதல் ஒன்றே தோல்வியுறாது தன்னையும் தான் கொண்ட பிற விருப்பங்களையும் வெற்றி கொள்வதும் ஆகையால் விறல் வேட்கை என்றாள். விறல்-வெற்றி. தான் பற்றியவிடத்துப் பிற பற்றுகளைப் பற்றவிடாத தன்மை பற்றிக் காதல் வெற்றி பெற்றதென்றாள். வெற்றிபெற்றது பற்றி அதன் ஆளுகைக்குத்தான் அடங்கினது இயற்கையே என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/131&oldid=1220738" இலிருந்து மீள்விக்கப்பட்டது