19
19
பெருமகள் :
வாழ்த்து-விருத்தம்
பசும்பாலும் சீனியும்போல் சேர்ந்துலகில் பண்புடைய குடும்ப நலம் சுவைத்திடுவீர் விசும்பதனில் தண்மதியும், அதனொளியும் விளங்குவபோல் வாழ்க்கையினில் திளைத்திடுவீர் நசுங்கி விடும் உணர்வுதனைச் செம்மையாக்கி நல்லறத்தில் துணிவுடனே செலுத்திடுவீர் பொசுங்கரிய நற்பேறு பதினாறுமிங்கு பெற்றுயர்ந்து பெருமையுடன் வாழ்க! வாழ்க!
(அவர்கள் வணங்கி நிற்கப் பெருமகள் வாழ்த்திச் செல்லுகிறாள். பின்னர் தலைவனும் தலைவியும் மகிழ்வோடு பாடியாடுகின்றனர்)
பாட்டு-தாளம்-ராகம்
தலைவன் : வாழ்வாங்கு வாழுவோம் வளமாக வாழுவோம் வலிவோடு தமிழ்வாழும் நாட்டிலே, தாழ்வேதும் வருகுமோ? தரமேதும் குறையுமோ? தன்மானம் காப்பனின் வீட்டிலே? நாட்டிலே (வாழ்)
தலைவி: குயிலாகக் கூவுவோம் மயிலாக ஆடுவோம் குறைவில்லாப் பேரின்பம் பருகுவோம் ஒயிலாக ஒளியாக ஒற்றுமையின் விளைவாக உயர்வான வாழ்வுதனைப் பெறுகுவோம், பருகுவோம் (குயி)
(கைகோர்த்துப் பறந்து மகிழ்கின்றனர்)
பாட்டு -தாளம்-அடை
தலைவன் ஆணெட்டும் பெண்ணெட்டும் ஆகப் பதினாறு
அருமைக் குழந்தைகள் பெறவேண்டும் - ஆகட்டும் போகட்டும் என்று சொல்லிப்பின்னர் அடியேனை ஏமாற்றவிட மாட்டேன்
தலைவி: ஐயையோ பதினாறு அம்மம்மா பதினாறு
ஆகாதென்னாலய்யோ ! நான் மாட்டேன் ஆஸ்திக்கு ஆணொன்று ஆசைக்குப் பெண்ணொன்று அதுபோதும் இதமாகப் பெறுவேனய்யா.
பாட்டு-தாளம்-அடை
தலைவன்: தலைவன் சொல்லினையே கடந்தால்
கற்பு நிலைத்திடுமோ?-அந்த உணர்வுடையவளாய் எனக்கு உடன்படலே தருமம்
(அஞ்சுகிறாள்)
தலைவி : மன்னிக்க வேண்டுமத்தான் என்றனின்
மனந்தடுமாறியதோ-எந்த எண்ணிக்கையானாலும் பிள்ளையை ஈன்றிங் நான் தவறேன்
(பணிகிறாள். தலைவன் அன்போடு தூக்கி விடுகிறான். இரு வரும் மகிழ்கின்றனர். செல்வரங்கம் துடிக்கிறார், முத்தனும், பரமசிவமும் சுவைக்கின்றனர்).