பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

69


அந்த நாடகாசிரியருக்குப் புகழ் அப்போது கிடைக்கவில்லை. அதனால் அவர் நெஞ்சம் புண்ணாகியது. வருத்தத்தில் தோய்ந்தார்.

வீட்டிலிருந்த அறையினுள் அவர் இயற்றிய நாடகங்கள் குவிந்து கிடந்தன. அவற்றின் மத்தியில் பசியாலும் பட்டினியாலும் தவித்தார். வேறு வழி இல்லை.

பாழாய்ப் போன எந்தப் பிரசுரகர்த்தரும் பிரசுரிக்க முன்வரவில்லை. . .

ஒரு நாள் நாடகங்கள் அனைத்தையும் மூட்டையாகக் கட்டிச் சுமந்து சென்று ஒரு மளிகைக் கடைக்காரனிடம் எடை போட்டு பழைய காகித விலைக்கு விற்று விட்டார்.

மளிகைக் கடைக்காரர், நாடகங்களை ஒவ்வொரு ஏடாகக் கிழித்துப் பொட்டலம் கட்டும்போது, ஒன்றை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஆச்சரியப் பட்டார். ஆகா! அற்புதமான படைப்பு” என வியந்தார்.

அதன்பின் ஒரு பதிப்பாளரிடம் சிபார்சு செய்தார் மளிகைக் கடைக்காரர்.

கிழித்துப் பொட்டலம் கட்டப்படாத பல நாடகங்கள் அச்சாகி வெளிவந்தன.

நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. ஒவ்வொரு பிரதியும் 500 பவுன் வரையில் கிராக்கி யோடு விற்பனை ஆயின.

நாடகம் எழுதியவர் பெரும் பயனை அடைந்தார்!

அவர் யார்? அவரே பிரபல நாடகாசிரியர் இப்ஸன்!