பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvii

தமிழாசிரியர்களும், கல்வித் துறையில் பணியாற்றும் பிறரும், பொதுமக்களும் சிந்திக்கவேண்டிய பல கருத்துக்கள் இதில் குறிப்பிட்ப்பெற்றுள்ளன. இவையே முடிந்த முடிபென்று அறுதியிட்டு உரைத்தேனில்லை. அவசியம் ஏற்படில் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்; செய்து கொள்ளத்தான் வேண்டும். தாய்மொழியறிவு செம்மையாக வாய்த்தால்தான் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருத்போருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையில் நல்ல தொடர்பு ஏற்படும் ; மேலும் அரசியல் போக்கை மக்கள் நன்குணரவும், தங்கள் விருப்பத்தை அரசினருக்குப் புலப்படுத்திக்கொள்ளவும் இயலும். சுருங்கக் கூறின், தாய்மொழியின் வளந்தான் அரசினருக்கும் மக்கட்கும் நேரடியான தொடர்பை உண்டாக்க முடியும்.

தாய்மொழியை எல்லோரும் எளிதில் கற்றுக்கொள்ளலாமே ; பிறந்த சில ஆண்டுகளில் குழந்தை, தான் வாழும் சூழ்நிலையில் பெற்றோர், உற்றார், உறவினர் சமூகம் ஆகியோரின் மூலமாகத் தாய்மொழியை மிக விரைவாகக் கற்றுக்கொள்வதிலிருந்து இவ்வுண்மை தெளிவாகுமே ; இவ்வளவு எளிதாகக் கற்கக்கூடிய தாய்மொழியைக் கற்பித்தற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லேயே என்று சிலர் கருதலாம்; உண்மையாகப் பலர் அவ்வாறுதான் கருதுகின்றனர். ஒரு குழந்தையோ அல்லது படிக்காது வளர்ந்தவரோ தம் அன்றாடத் தேவைக்காகக் கற்கும் நிலைவேறு ; பல நூற்றாண்டுகளாகப் பண்பட்டு இலக்கிய இலக்கண வளம் படைத்த மொழியை அறிவியல் நிலையில் வைத்துக் கற்பது வேறு என்பதை, எண்ணிப் பார்க்கும் அனைவரும் எளிதில் உணர்வர். உளவியல் உண்மைகள் பலவற்றைக் கண்டறிந்த பிறகு இஃது இன்னும் தெளிவாகப் புலனாகியுள்ளது.

நீண்ட நாட்களாகவே நவீன முறையில் தமிழ் கற்பிப்பதைப்பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட எண்ணியிருந்தேன். ஒன்பது ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாக இருந்தபொழுது நேரில் கவனித்த பல்வேறு

த—В