பக்கம்:ஊரார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


"சாமியாருக்குப் பதினாறு வயசு கேட்குதா?" வேதாசலம் கேலியாகச் சிரித்தான்.

"கேலி இருக்கட்டும்; எங்கே வந்தீங்க?" "இந்த வாச் என் கைக்கு எப்படி இருக்குது?"

"அளகா இருக்குது; புது வாச்சா? எப்ப வாங்கினீங்க?"

"சிங்கப்பூர்லேர்ந்து வந்துது."

"கடத்தல் சரக்கா?"

“தெரிஞ்சவர் வாங்கிட்டு வந்தாரு."

"அவர் எனக்கும் தெரிஞ்சவர்தான்!" என்று கண் சிமிட்டிச் சிரித்தார் சாமியார்.

வேதாசலம் பழைய ரிஸ்ட் வாச் ஒன்றை ஜிப்பாப் பையிலிருந்து எடுத்து “இதைக் கையிலே கட்டிக்குங்க. 'ஒமேகா' வாச்! நாற்பது ரூபா கொடுத்து ரிப்பேர் செஞ்சிருக்கேன்" என்றான்.

“இந்தக் கட்டைக்கு எதுக்குப்பா இதெல்லாம்..."

"அட, கட்டிக்குங்க சாமி! அன்போட தரேன்."

சாமியார் கையில் பலாத்காரமாக வாச்சைக் கட்டி “உங்க கைக்கு இது ரொம்ப சைஸா இருக்குது” என்றான்.

"என்ன வேதாசலம்! என்ன விசயம்! எதுக்கு அடி போடறே?"

“உங்க கையாலே ஒரு உதவி..."

"அதானே பார்த்தேன். அதுக்குத்தான் இந்த வாச்சாம்... சொல்லு."

வேதாசலம், சாமியார் காதை ஐந்து நிமிடம் கடித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/14&oldid=1284209" இலிருந்து மீள்விக்கப்பட்டது