பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18


முயலம்மா தன் குட்டிகளோடு ஒரு புதரின் நடுவில் வாழ்ந்து வந்தது. மாலையில் புதருக்கு வெளியே வந்து குட்டிகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. குட்டிகள் நான்கும் துள்ளித்துள்ளிப் பாய்ந்து ஒடிச் சென்றன. அம்மாவைச் சுற்றிக் கொண்டன. அம்மாவும் ஒவ்வொன்றையும் முத்தம் இட்டது. தன் நாவினால் ஒவ்வொரு குட்டியையும் தடவிக் கொடுத்தது.

தொலைவிலேயே இந்த அன்புக் காட்சியை அண்ணாவி அல்சேசன் பார்த்தது.ஆனால் அதனால் அந்தப் புதரின் அருகில் நெருங்கிச் செல்ல முடியவில்லை. அந்த முயல்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வந்த தீய நாற்றம் அதை நெருங்க விடவில்லை.

இத்தனை அழகாகவும் பளபளப்பாகவும் பார்க்கப் பரிசுத்தமாகவும் இருக்கும் இந்த முயல்கள் வாழும் இடம் இப்படி இருக்கிறதே. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறை இருப்பது இந்த உலகத்து இயற்கை போலும். எல்லா நிறையும் உள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது என்று அண்ணாவி நினைத்துக் கொண்டது.

மறுநாள் முதல் அண்ணாவி அல்சேசன் எல்லா மாணவர்களையும் ஒன்றுபோல் நடத்தியது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி எல்லாக்குட்டிகளையும் சமமாக நடத்தியது. அதனால் அண்ணாவியின் புகழ் காடெங்கும் பரவியது.

அண்ணாவி ஓர் அதிசய ஞானி என்று அந்தக் காட்டு விலங்குகள் பேசிக்கொண்டன. அது தொடங்கிய பாலர் பள்ளி சீரும் சிறப்புமாக நடந்தது.