பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

85


சின்னானின் பிடறியில் பட்டு பட்டென்று பிரம்படி விழுந்தது. வேனிற்குள் இருந்த இன்னொரு போலீஸ்காரர் அவன் தலைமுடியைப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டார். வேறொருவர், சீனனின் கையை முறுக்கியபடி அவனை வண்டிக்குள் குப்புறத் தள்ளினார்.

தாயம்மா, மாரியம்மாள். துலுக்காணம், சாந்தி ஆகிய அத்தனைபேரும் அழுகிப்போன பூக்கள்போல வேனிற்குள் எறியப்பட்டார்கள். வண்டிக்குள் இருந்த தாயம்மா, கீழே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்து "நயினா வந்துடம். விசயத்தைச் சொல்லிட்டு, இங்கேயே இரு" என்று விழியாட்டிப் பேச - சின்னான், 'பயப்படாதே' என்பதுபோல் மனைவியின் முதுகைத் தட்டிக் கொடுக்க, சீனன், தன் முகத்தில் பதிந்த போலிஸ் கீறலைப் பெருவிரலால் அழுத்த துலுக்காணமும், சாந்தியும், ராமனை ஆளுக்கொரு பக்கமாக பார்க்க, கீரைக்காரி மாரியம்மாள் சிதறிக் கிடந்த பொருட்களையும், கோவில் முகப்பில் பட்டும் படாததும்போல் பார்த்துக் கொண்டிருந்த காந்தாவையும் வெறுமையுடன் நோக்க...

போலீஸ்வேன் புறப்பட்டது. வேக வேகமாக ஓடியது. சுதந்திரமும் சுய மரியாதையும் வேறு வேறு என்று உணராத அந்த நிஜார் போடாத சின்னப்பயல் சிறிதுநேரம் திகைத்து நின்று விட்டு, பிறகு அந்த வேனுக்குப்பின்னால் ஓடினான். அந்த போலீஸ்வேன் கிளப்பிய புழுதியோ பிள்ளையார் கோவிலை மறைத்தது.

இதயம் பேசுகிறது, 14-11-82