பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

21

‘சாமி ஆடிகள்’ - வெளியான பிறகு

ஆனந்த விகடனில் “சாமி ஆடிகள்” சிறுகதை வெளியான ஒரு மாதத்திற்குள் கித்தாப்புடன் ஊருக்குப் போனேன். என் உறவினர்களும், ஊரார்களும் என்னை பிரமிப்பாக பார்க்கப் போகிறார்கள் என்ற எண்ணம்; ஆனால் ஊருக்குப் போனவுடனேயே என்னை வாயார வாழ்த்தி வரவேற்பவர்கள் கூட, ஏற இறங்கப் பார்த்தார்கள். ஊர்க்காரர்களைக் கதாநாயகர்களாக்கிய பெருமையில் போன என்னை, அசல் “வில்ல”னைப் போலப்பார்த்த பெரும்பாலோர் என்னிடம் பேசவில்லை. நானே வலிய பேசினாலும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார்கள். வீட்டுக்குப் போன பிறகு, என் குடும்பத்தினர் விவரம் சொன்னார்கள். நான் எங்கள் ஊரைப் பத்திரிகையில கேவலப்படுத்தி விட்டதாக ஊரில் ஒரு பேச்சு அடிபடுவதாகக் கூறப்பட்டது. ஊரிலிருந்து நகரங்களில் வேலை பார்க்கும் படித்த பையன்கள் ஊரிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்களே தவிர, இப்படி சமுத்திரத்தைப் போல் கேவலப்படுத்தியது இல்லை என்றும் பேசிக் கொண்டார்களாம். இதில் ஒரு வேடிக்கை. நான் ஆடும் சுடலைமாடனாக காட்டிய பாத்திரத்திற்கு “முத்துப் புதியவன்” என்று பெயர் வைத்திருந்தேன். இது தற்செயலாக வைத்த பெயர். சாமி ஆடியவர் வெளியே வேலை பார்த்ததால் எனக்குப் பரிச்சயம் இல்லாதவர். சாமி ஆடும்போது மட்டும்தான் அவரைப் பார்த்திருக்கிறேன். அதுவும் “சல்லடையும், குல்லாயுமாக” அவர் பெயரும் முத்துப்புதியவன் என்பது ஊருக்குப் போன பிறகுதான் தெரிந்தது. ஆகையால் அவரது குடும்பத்தினர் நான் வேண்டுமென்றே இழிவு படுத்துவதற்காக எழுதியதாக நினைத்துக் கொண்டார்கள். நல்ல வேளை, அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்பதால், அடிதடி வராமல்