பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

49

நிர்வாணத்துடன் காட்டிக்கொண்டிருக்க கஷ்டமாக இருந்தது. பெண்களுடன் போட்டியிட்டு, குழாயடியில் தண்ணீர் பிடிப்பது என்னவோபோல இருந்தது. இந்தப் பின்னணியில், அந்த அசுத்தக் காற்றிலும் ஒரு தென்றல் வாடை கிடைத்தது. என் வீட்டிற்குப் பக்கத்து வீடு ஒரு பூக்காரக் குடும்பம் வாழ்ந்த வீடு. அங்கே வயதுக்கு வந்த ஒரு பூக்காரப் பெண். அம்மாவும், அண்ணனும், வாங்கி வரும் உதிரிப் பூக்களை மாலையாகத் தொடுக்க வேண்டியது அவளது பணி. ஆள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை என்றாலும் அழகாக இருப்பாள். கலகலவென்று சிரிப்பாள். எதற்கெடுத்தாலும் ‘நல்லா கேட்டே ஒரு கேள்வி!’ என்பாள். அவளுக்கு என் மீது ஏனோ ஒரு அனுதாபம். நான் குழாயடியில் படும்பாட்டையும், கல்லூரித் தோழர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை உட்கார வைக்க இடம் கிடைக்காமல் திண்டாடுவதையும் கண்டவள். ஒரு நாள் குழாயடியில் தவலையுடன் இறங்கப்போன என்னை கீழே நின்ற அவள் கையாட்டித் தடுத்தாள். முகத்தை வெட்கமாக்கிக் கொண்டு, என் தவலையை வாங்கி, தண்ணீர் பிடித்துக் கொடுத்தாள். எவரும் கண்ணில் தென்படாதபோது, நான் குளிக்கப்போவதும், அவள் தண்ணீர் பிடித்துக் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது. கல்லூரிக்குப் போகும் போது வாசலில் நின்று வழியனுப்பி வைப்பாள். கல்லூரியில் பேச்சுப் போட்டிகளில் நான் வாங்கும் கோப்பைகளை இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக அவளிடம் கொடுப்பேன். அவள், அவற்றை வாங்கி கண்ணில் ஒற்றி என்னிடம் திருப்பிக் கொடுப்பாள். இவ்வளவுக்கும் தொட்டதில்லை, கெட்டதில்லை. நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டோமே தவிர, பேசிக் கொண்டதில்லை’