பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27. கொடுங்கோலன் தீய கொடுங்கோலன் ஒருவன் இருந்தான். அக்காலத்தில் தேவேந்திரன் ஒரு வேடனைப்போல் உருவெடுத்துக்கொண்டு, மாதலி என்ற அரக்கனைப் பெரிய நாயாக உருமாற்றிக் கையிலே பிடித்துக்கொண்டு பூவுலகுக்கு இறங்கி வந்தான். வேடனும் நாயும் கொடுங்கோலனின் அரண்மனைக்குச் சென்றதும், நாய் மிகவும் உரக்க ஊளையிட ஆரம்பித்தது. அந்த ஒலியினால் அரண்மனையின் அஸ்திவாரமே ஆடத்தொடங்கிற்று. கொடுங்கோலன் வேடனைத் தன் சிம்மாசனத்தின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தச் செய்தான். நாய் பயங்கரமாகக் குரைப்பதன் காரணத்தை அவன் வினவினான். 'நாய் பசியாயிருக்கிறது!’ என்றான் வேடன். நடுக்கமுற்றிருந்த மன்னன் அதற்கு உணவளிக்க உத்தரவிட்டான். அரண்மனையில் தயாரித்திருந்த உணவு முழுதும் நாயின் வாய்க்குள் போய்விட்டது; ஆயினும் அது பசியடங்காமல் மேலும் பலமாகக் குரைத்துக் கொண்டேயிருந்தது. - அரண்மனை உக்கிராணத்திலிருந்த பொருள்கள் எல்லாம் அதற்கு உணவாக அளிக்கப்பட்டும், அதன் குரைப்பு நிற்கவில்லை. கொடுங்கோலன் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், பயங்கரமான அந்த வேடனைப் பார்த்து, 'இந்தப் பயங்கரமிருகத்தின் பசி இன்னும் என்னென்ன படைத்தால் தணியும்?' என்று கேட்டான். 'என்ன படைத்தாலும் தணியாது; ஒருவேளை அதனுடைய எதிரிகள் எல்லோருடைய மாமிசத்தையும் படைத்தால் பசி குறையலாம். என்றான் வேடன். 'அதன் எதிரிகள் எவர்கள்?' என்று கொடுங்கோலன் ஆவலோடு கேட்டான். வேடன் கூறியதாவது: 'இராஜ்யத்தில் மக்கள்.பசியோடு இருக்கிறவரை இந்த நாய் குரைத்துக்கொண்டேயிருக்கும்; அநீதி செய்து, ஏழைகளை நசுக்கி வருபவர்களே இதன் எதிரிகள்' மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த மன்னனுக்குத் தன் கொடுமைகள் யாவும் நினைவுக்கு வந்தன. அவன் உள்ளத்தில் கழிவிரக்கம் தோன்றிற்று. அவன் வாழ்க்கையிலே முதல் முறையாக நீதி, நேர்மைகளைப் பற்றிய உபதேசங்களை அப்பொழுதுதான் கேட்க ஆரம்பித்தான். ' 54 புத்தரின் போதனைகள்