பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறங்கூறுதல், நிந்தனை, பயனற்ற சொல் ஆகியவைகளிலிருந்து விலகி நிற்றல் நல்வாய்மை யென்ற மூன்றாம் படி உயிர்க்கொலை நீக்கி, களவு, கவறாடலை ஒழித்து, தவறான சிற்றின்ப வேட்கைகளை அடக்கி வாழ்தல் நான்காம் படியாகிய நற்செய்கை. இதற்கு மேலாக, வாழ்க்கை நடத்தும் முறையும் தூயதாயிருக்க வேண்டும். புலால், மீன் முதலியவை விற்றல், வெட்டுவதற்காக விலங்குகள் விற்றல், மது வகைகள், இலாகிரிப் பொருள்கள். விஷங்கள். கொலைக் கருவிகள் முதலியவைகளில் வாணிபம் செய்தல் முதலிய தீய கருமங்களை விட்டு ஒழுங்கான முறையில் தொழில் செய்து பிழைத்தல் நல்வாழ்க்கை. ஆறாவதுபடி நல்லுக்கம். இது மிக மிக முக்கியமானது. நல்லுக்கம் ஒன்று இல்லாவிட்டால் மனிதனுக்குக் கடைத்தேற்றமே யில்லை. இதைக் கொண்டுதான் அவன் தன் மன மாசுகளை நீக்கி, நல்லெண்ணங்களை இடைவிடாமல் வளர்த்துச் சித்த உறுதி பெற முடியும். அடுத்த ஏழாம்படி நற்கடைப்பிடி. உடல் பல கந்தங்களின் சேர்க்கை யென்று தெளிவுற்று, அயர்வைக் களைநது, நிலைத்த சிந்தையுடனும், ஊக்கத்துடனும், சாந்தியோடு உறுதியுற்றிருத்தலே நற்கடைப்பிடி. புத்தர் பிரான் பிக்குகளுக்கு உபதேசஞ் செய்யும் போதெல்லாம். கருத்தோடிருங்கள்! கருத்தோடிருங்கள்!' என்று இதைக்கொண்டே இடைவிடாது கூறி வந்திருக்கிறார். கருத்தின்மை நரகப் பாதை, கருத்துடைமை சுவர்க்கப் பாதை என்பது அவர் கொள்கை. எட்டாவது படி நல்லமைதி.

இதுவரை குறித்துள்ள ஏழு படிகளுக்கும் சிகரமாக அமைந்துள்ளது நல்லமைதி. ஞானத்தினால் ஒருவன் நன்மை தீமைகளைப் பாகுபடுத்தி அறிய முடியுமே தவிர, மனத்தை ஒருநிலைப்படுத்த முடியாது மனத்தை ஒரு நிலைப்படுத்துவதுதான் அரிய - மிக - அரிய - கலை. 'சித்தத்தை ஒருநிலைப்படுத்து - ஆயிரம் யானைகளின் பலம் உண்டாகும்' என்றார் பதஞ்சலியும். இது பயிற்சியினாலேயே கைகூடும். தியானம், சமாதி, யோகம் என்பவை உள்ளத்தை ஒருமுனைப்படுத்தும் கலையேயாகும். உள்ளத்தூய்மை, அன்பு, தெளிவு. அறிவை ஆதாரமாய்க்கொண்ட நம்பிக்கை ஆகியவற்றைப் பெற்ற பின்பே தியானம் அல்லது சமாதி நிலை எளிதாகும். இவ்வாறு எட்டுப்படிகளுள்ள அஷ்டாங்க மார்க்கத்தின்படி நடந்து.தியானத்தின் மூலம் பரிசுத்தமான எண்ணங்களை வளர்த்து, ஏகாந்த வாசத்தில் இன்பம் பெற முயற்சி செய்து வந்தால், முடிவில் முந்திய பிறவிகளின் வரலாறுகளும், எதிர்கால நிகழ்ச்சிகளும், பிரபஞ்சத்தின் நியதியும் தெளிவாகத் தெரிவதுடன், நிருவான இன்பமும் சித்திக்கும் என்று போதி வேந்தர் அருளியுள்ளார்.10