பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாங்களே அறியாத, பார்த்திராத, பிருமத்தோடு ஐக்கியமாவதற்குப் பிராமணர்கள் வழிகாட்டுதல் என்பது உலக இயல்புப்படி நடவாத காரியம். குருடர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நிற்கையில், முதலில் இருப்பவரும் பார்க்க முடியாது. நடுவில் இருப்பவரும் பார்க்க முடியாது. கடைசியில் இருப்பவரும் பார்க்க முடியாது என்பதைப்போலவே, இந்தப் பிராமணர்களுடைய பேச்சும் இருப்பதாக நான் கருதுகிறேன். முதலில் இருப்பவரும் காணவில்லை, நடுவில் இருப்பவரும் காணவில்லை. கடைசியில் இருப்பவரும் காண முடியவில்லை. ஆகவே இந்தப் பிராமணர்களுடைய பேச்சு பரிகாசத்திற்கு இடமாயும், வெறும் சொற்குவியலாயும், பொருளற்ற வெற்றுரையாகவுமே இருக்கின்றது '

ஒருமனிதன், இந்த நாட்டிலுள்ள தலைசிறந்த அழகியை நான் விரும்புகிறேன்; அவளிடம் எவ்வளவு காதல் கொண்டுள்ளேன்' என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஜனங்கள் அவனிடம், 'நல்லது அன்ப நீ காதல் கொண்டு உருகும் நாட்டிலே சிறந்த நல்லமுகி க்ஷத்திரிய வமிசத்தைச் சேர்ந்தவளா, பிராமண குலத்தவளா, அல்லது வைசிய, சூத்திரகுலத்தவளா? என்று கேட்பார்கள். அப்போது அவன் என்ன பதில் சொல்ல முடியும்? தெரியாது' என்றுதான் சொல்வான்.

அந்தத் தலைசிறந்த அழகியின் பெயர் யாது? அவளது குலப்பெயர் என்ன? அவள் நெடிய உருவமுள்ளவளா, குள்ளமானவளா? அவள் கறுப்பா, பொதுநிறமா, சிவப்பா? அவள் எந்த நகர் அல்லது கிராமத்தில் வசிக்கிறாள்' என்றெல்லாம் வினவினால் அவன் 'தெரியாது' என்றுதான் பதில் சொல்ல முடியும். அப்போது ஜனங்கள், நண்பா நீ தெரிந்திராத பார்த்திராத, ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு நீ உருகுகிறாயா?" என்று சுெட்பார்கள். அவனும் ஆம்' என்பான். அதைப் போலத்தான் இதுவும். பிருமம் இருக்கிறது என்றும், அதை அறியாமலும் பாராமலும் இருப்பவர்கள். அதை அடைந்து அதனுடன் ஐக்கியமாவதற்கு வழிகாட்ட முன்வருவதும் அறிவீனமானதேயாம். அப்படி உலகில் சாத்தியமில்லை."

அந்தணா அக்கினியில் சமித்துக்களைச் சொரிவதால் மட்டும் பரிசுத்தம் வந்துவிடுவதாகக் கருதவேண்டாம். ஏனெனில் அது வெளியேதான் நிகழ்வது; ஆதலால் அந்த வழியை விட்டுவிட்டு, நான் எனது அக்கினியை அகத்தினுள்ளேதான் மூட்டியிருக்கிறேன். அது என்றும் எரிந்துகொண்டிருக்கும்." ப. ராமஸ்வாமி 73